பதிவு செய்த நாள்
11 மார்2012
02:33
எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி குறைந்துள்ளதால், சமையல் எண்ணெய் விலையை உயர்த்த, நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.நடப்பு எண்ணெய் பருவத்தில் (நவம்பர் - அக்டோபர்), நாட்டின் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ரூபாயின் மதிப்பு :மேலும், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு வீழ்ச்சியாலும், அமெரிக்காவில் சோயா சாகுபடி சரிவடைந்துள்ளதாலும், நாட்டின் சமையல் எண்ணெய் உற்பத்தி குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அண்மைக் காலமாக சமையல் எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. சென்ற பிப்ரவரியில் இருந்து, சமையல் எண்ணெய் விலை 5-10 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.இது குறித்து, அதானி வில்மர் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி அங்ஷு மாலிக் கூறும்போது, " டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பில் அதிக அளவில் ஏற்றத்தாழ்வு உள்ளது.
உள்நாட்டில் சென்ற ஆண்டை விட, நடப்பாண்டில் கடுகு உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவிற்கு குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றின் காரணமாக, கடந்த சில வாரங்களாக சமையல் எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது' என தெரிவித்தார்.சென்ற ஜனவரியில், சமையல் எண்ணெய் வகைகளின் விலை நிலையாக இருந்தது. ஆனால், பிப்ரவரியில் அவற்றின் விலை 5-10 சதவீதம் உயர்ந்துள்ளது.
அந்த மாதத்தின் துவக்கத்தில், ஜெய்பூரின் எம்.சி.எக்ஸ். முன்பேர சந்தையில், 10 கிலோ கடுகு எண்ணெய் விலை 715 ரூபாயாக இருந்தது. இது, மாத இறுதியில் 783 ரூபாயாக உயர்ந்து விட்டது. அதுபோன்று, மும்பையில், 10 கிலோ சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் விலை, 561லிருந்து 576 ரூபாயாக உயர்ந்துள்ளது.
சந்தை மதிப்பு:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு வீழ்ச்சி கண்டுள்ளதால், இறக்குமதியாகும் ஒரு டன் சமையல் எண்ணெயின் விலை, 1,200 டாலர் வரை உயர்ந்துள்ளது. இதனால் சில்லரை விற்பனையில் சமையல் எண்ணெய் விலை, கிலோவிற்கு 2 ரூபாய் வரை உயரும் என மாலிக் மேலும் கூறினார்.நாட்டின் சமையல் எண்ணெய் சந்தை மதிப்பு 75 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. இதில், அமைப்பு சார்ந்த (பிராண்டட்), நிறுவனங்களின் பங்களிப்பு 40 சதவீதமாக உள்ளது.
இறக்குமதி:இந்தியாவின் ஒட்டுமொத்த சமையல் எண்ணெய் பயன்பாட்டில், இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெயின் பங்களிப்பு, 55 சதவீதத்தில் இருந்து 57.54 சதவீதமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.சென்ற ஆண்டு, உள்நாட்டில் சமையல் எண்ணெய் உற்பத்தி, 71.5 லட்சம் டன்னாக இருந்தது. இது, நடப்பு ஆண்டில் 69.5 லட்சம் டன்னாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், நடப்பாண்டு, தனி நபர் எண்ணெய் பயன்பாடு, 12.96 கிலோவில் இருந்து 13.18 கிலோவாக உயரும் என உணவு அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது.உற்பத்திக்கும், தேவைக்கும் இடையிலான பற்றாக்குறை அதிகரித்து, இறக்குமதி உயரும் பட்சத்தில், சமையல் எண்ணெய் விலை மேலும் உயரும் என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.
பாமாயில் விலை உயர்வு:உலகளவில் பாமாயில் சப்ளையில் மலேசியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நாட்டின் பாமாயில் உற்பத்தி, சென்ற ஆண்டு ஆகஸ்ட் முதல் குறைந்து வருகிறது. இதனால், பாமாயில் விலை உயர்ந்துள்ளது. சென்ற மாதம், மலேசியாவின் பாமாயில் கையிருப்பு 5.4 சதவீதம் குறைந்து 19 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.
இதனால், பாமாயில் சப்ளை குறையும் என்ற எதிர்பார்ப்பில், மலேசிய முன்பேர சந்தையில், கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத அளவாக அதன் விலை உயர்ந்துள்ளது. மே மாத சப்ளைக்கான ஒரு டன் பாமாயில் விலை, 1.5 சதவீதம் உயர்ந்து 3.352 ரிங்கிட் (1,114 டாலர்) ஆக அதிகரித்துள்ளது.
பாமாயில் விலை உயர்வு காரணமாக, அதற்கு மாற்றாக விளங்கும் சோயா எண்ணெய்க்கான தேவை அதிகரித்து வருகிறது. இதனால் இதன் விலையும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் உயர்ந்து வருகிறது.
பிரேசில் நாடு:இந்நிலையில், சோயா உற்பத்தியில் முன்னணியில் உள்ள பிரேசில், அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் அதன் சாகுபடி குறையும் என, அமெரிக்க வேளாண் துறை மதிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக, சோயா எண்ணெய் விலையும் குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்து வருகிறது. இதனால் பாமாயில், சோயா எண்ணெய் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதற்கான செலவினம் அதிகரித்துள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|