பதிவு செய்த நாள்
12 மார்2012
09:57
புதுடில்லி : விரைவு அஞ்சல் (ஸ்பீடு போஸ்ட்), மணி ஆர்டர் போன்ற சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்தவும், அஞ்சல் அட்டை மற்றும் இன்லேண்ட் லெட்டர் விலையை உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய தபால் துறையில், 2002ம் ஆண்டில், கட்டண உயர்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்பின், அச்சிடும் செலவும், போக்குவரத்து செலவும் கடுமையான அதிகரித்துள்ளது. இருந்தும், 10 ஆண்டுகளாக எந்த கட்டண உயர்வும் அறிவிக்கப்படவில்லை.அதனால், தபால் துறை கடந்த பல ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த 2006-07ம் நிதியாண்டில், 1,249.52 கோடியாக இருந்த தபால் துறையின் நஷ்டம் 2009-10ம் நிதியாண்டில் 5,632.46 கோடியாக அதிகரித்துள்ளது.ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைகள் அடிப்படையில், தபால் துறை ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியச் செலவு பெருமளவு அதிகரித்துள்ளதால், 2010-11, 2011-12ம் ஆண்டுகளில் நஷ்டம் அதிகமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், விரைவு அஞ்சல், மணி ஆர்டர் போன்ற சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்தவும், அஞ்சல் அட்டை மற்றும் இன்லேண்ட் லெட்டர் விலையை 15 முதல் 20 சதவீதம் வரை உயர்த்தவும் தபால் துறை திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான முன்மொழிவுகளையும், அரசுக்கு அனுப்பியுள்ளது. அப்படி கட்டண உயர்வு நிகழ்ந்தால், அது 10 ஆண்டுகளுக்குப் பின் நிகழும் கட்டண உயர்வாக இருக்கும்.இந்த கட்டண மற்றும் விலை உயர்வுகள் எல்லாம் ஏப்ரல் முதல் தேதி முதல் அமலுக்கு வரலாம். அப்படி வரும் போது, தபால் துறைக்கு கூடுதலாக ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். கட்டண உயர்வு மற்றும் விலை உயர்வு யோசனைக்கு ஏழு உறுப்பினர்களைக் கொண்ட, அஞ்சல் கமிஷனும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கமிஷனின் தலைவராக தபால் துறையின் செயலர் உள்ளார்.விரைவு அஞ்சலுக்கான கட்டண உயர்வை, தபால் துறையின் அமைச்சர் ஒப்புதல் கொடுத்தால் மட்டுமே அமல்படுத்த முடியும். இதர சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டும் எனில், தபால் துறை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|