பதிவு செய்த நாள்
14 மார்2012
00:23
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் செவ்வாய்கிழமையன்று நன்கு இருந்தது. சர்வதேச நிலவரங்களால், சில்லரை முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு மேற்கொண்டதையடுத்து, இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டன. மேலும், கிரீஸ் நாட்டு கடன் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையிலான, நிதி உதவி திட்டங்களுக்கு இறுதி ஒப்புதல் கிடைத்ததையடுத்து, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்தது. இதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
அன்னிய செலாவணி வர்த்தகத்தில், நேற்று, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளி மதிப்பு உயர்ந்து, 49.83 ரூபாய் என்றளவில் உயர்ந்து காணப்பட்டது. இது, சென்ற திங்களன்று 49.96 ரூபாயாக இருந்தது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், பொறியியல், எண்ணெய், எரிவாயு, ரியல் எஸ்டேட், உலோகம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், விப்ரோ, பஜாஜ் ஆட்டோ, டாட்டா உள்ளிட்ட ஒரு சில நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து போனது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 225.95 புள்ளிகள் அதிகரித்து, 17,813.62 புள்ளிகளில் நிலைபெற்றது.
வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 17,842.92 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,680.23 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 25 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 5 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 69.95 புள்ளிகள் உயர்ந்து, 5,429.50 புள்ளிகளில் நிலைகொண்டது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 5,438.65 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,390.80 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|