பதிவு செய்த நாள்
21 மார்2012
00:01
புதுடில்லி: மத்திய திட்டக் கமிஷன் வெளியிட்டுள்ள வறுமைக் கோட்டிற்கான புதிய வரையறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பார்லிமென்டில் எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். நகர்புறப் பகுதிகளில், நாள் ஒன்றுக்கு 28.65 ரூபாயும், கிராமப் புறங்களில் நாள் ஒன்றுக்கு 22.42 ரூபாயும் செலவிடும் அளவிற்கு திறன் உள்ள தனிநபர்கள், ஏழைகள் அல்ல என்று மத்திய திட்டக் கமிஷனின் டெண்டுல்கர் கமிட்டி மதிப்பீடு செய்துள்ளது.சென்ற ஆண்டு, திட்டக் கமிஷன், சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்தது. இதில், நகர்புறப் பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 32 ரூபாயும், கிராமப்புறப் பகுதிகளில், நாள் ஒன்றுக்கு 26 ரூபாயும் செலவிடும் திறன் கொண்ட யாரும் ஏழைகள் அல்ல என்றும், அவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. திட்டக் கமிஷனின் இந்தக் கருத்துக்கு, அப்போதே பலத்த சர்ச்சை மற்றும் கண்டனங்களும் எழுந்தன.ஆனால், சென்ற ஆண்டு மதிப்பீடான 32 ரூபாயை விட, தற்போதைய மதிப்பீட்டில் வறுமைக் கோட்டுக்கான வரையறையை 28.65 ரூபாயாக திட்டக் கமிஷன் குறைத்துள்ளது. இது, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மேலும், இந்தப் புள்ளிவிவரத்தில், 2004-05ம் ஆண்டில், 40 கோடியே 72 லட்சமாக இருந்த ஏழைகளின் எண்ணிக்கை, 2009-10ம் ஆண்டில், 34 கோடியே 47 லட்சமாக சரிவடைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.நகர்புறத்தை விட, கிராமப்புறத்தில் தான் வறுமை, வேகமாகக் குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக தமிழகத்தில், கடந்த 2004-05ம் ஆண்டு, 29.4 சதவீதமாக இருந்த வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோர் எண்ணிக்கை, சென்ற 2009-10ம் ஆண்டு 17.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆக, தமிழகத்தில், இடைப்பட்ட ஐந்தாண்டு காலத்தில், 12.3 சதவீதம் பேர் வறுமையின் பிடியிலிருந்து விடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதவிர, நகர்புறங்களில், முஸ்லிம்கள் தான் அதிக ஏழைகளாக இருப்பதாகவும், கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை இதைவிட குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, மத்திய திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா கூறும்போது, "ஏழைகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் எண்ணத்தில், இந்த வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. நுகர்வோர் குறித்த ஆய்வு முடிவுகளின்படியே, தற்போதைய அளவீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், உணவு மானியத்தில் எந்தவித பாதிப்பும் இருக்காது' என்று தெரிவித்தார்.திட்டக்குழு அறிக்கை குறித்து, பார்லிமென்டில் இன்றும் புயல் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|