பதிவு செய்த நாள்
27 மார்2012
00:30
புதுடில்லி : கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்திய நிறுவனங்கள், மத்திய அரசுக்கு செலுத்திய நிறுவன வரி, மூன்று மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. கணக்கீட்டு காலத்தில், வரி செலுத்தும் நிறுவனங்களின் எண்ணிக்கையும், இவற்றின் லாபமும் குறிப்பிடத்தக்க அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக, இந்தியாவில், 3.1 லட்சம் நிறுவனங்கள், வருமானம் குறித்த தகவல்களை வருமான வரி துறைக்கு தாக்கல் செய்திருந்தன. இந்த எண்ணிக்கை தற்போது, 5.1 லட்சமாக அதிகரித்துள்ளது. ஆக, ஐந்து ஆண்டுகளில், வரி செலுத்தும் நிறுவனங்களின் எண்ணிக்கை, 65 சதவீதம் அதிகரித்துள்ளது.
மூன்று மடங்கு : கடந்த 2006-07ம் ஆண்டில், நிறுவனங்கள், மத்திய அரசுக்கு செலுத்திய வரி, 79 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. இது, 2010-11ம் நிதியாண்டில், 2 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவில் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. நிறுவனங்கள் அவை ஈட்டும் மொத்த லாபத்திலிருந்து, குறிப்பிட்ட தொகையை வருமான வரியாக செலுத்துகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக, நிறுவனங்கள் செலுத்திய வரி அவற்றின் லாபத்தில் 19 சதவீதம் என்றளவில் இருந்தது. இது, தற்போது, 24.1 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டுள்ளது. கணக்கீட்டு காலத்தில், நிறுவனங்களுக்கான வரி 33 சதவீதம் என்றளவில் உள்ளது.
சர்க்கரை துறை : நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக, சர்க்கரை துறை நிறுவனங்களுக்கு பல்வேறு வரிச் சலுகைகள் அளிக்கப்பட்டன. அப்போது, இத்துறை நிறுவனங்கள் செலுத்திய வரி 3 சதவீதம் என்றளவில் இருந்தது. இத்துறை 2010-11ம் நிதியாண்டில், 26.2 சதவீத அளவிற்கு வரி செலுத்தியுள்ளன. சாப்ட்வேர் உற்பத்தி நிறுவனங்கள் செலுத்திய வரி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக, 12 சதவீதம் என்றளவில் இருந்தது. இது, கடந்த நிதியாண்டில், 19 சதவீதம் என்றளவில் உயர்ந்துள்ளது.
இதே போன்று, தகவல் தொழில்நுட்ப சேவை மற்றும் பீ.பி.ஓ நிறுவனங்கள் செலுத்திய வரி, 15 சதவீதத்திலிருந்து, 21 சதவீதமாக உயர்ந்துள்ளது. சாப்ட்வேர் தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் படிப்படியாக விலக்கி கொள்ளப்பட்டதையடுத்து, வரி செலுத்தும் விகிதம் உயர்ந்துள்ளது. நிறுவனங்களுக்கான குறைந்தபட்ச மாற்று வரி (எம்.ஏ.டி) விகிதம் கடந்த ஐந்து ஆண்டுகளில், 10 சதவீதத்திலிருந்து, 18.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது, ஒட்டுமொத்த அளவில் நிறுவனங்கள் செலுத்திய வரி அதிகரிப்பிற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
மருந்து நிறுவனங்கள் : மின்சாரம் மற்றும் எரிசக்தி நிறுவனங்கள் செலுத்திய வரி 22 சதவீதம் (16 சதவீதம்), ஜவுளி நிறுவனங்கள் 21 சதவீதம்(16 சதவீதம்), மருந்து நிறுவனங்கள் 21 சதவீதம் (17 சதவீதம்), வங்கி சாரா நிதி நிறுவனங்கள் 26 சதவீதம் (19) மற்றும் வாகனம், வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் 27 சதவீதம் (24 சதவீதம்) ஆகியவை அதிக அளவில் வரி செலுத்தியுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|