பதிவு செய்த நாள்
30 மார்2012
00:05
மத்திய பட்ஜெட்டில், கம்ப்யூட்டர் உதிரி பாகங்களுக்கான உற்பத்தி வரி, கூடுதல் இறக்குமதி வரி ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளதால், கம்ப்யூட்டர் விலை அதிகரிக்க உள்ளது.தாய்லாந்து நாட்டில் ஏற்பட்ட வெள்ளம், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி போன்றவற்றால், ஏற்கனவே கம்ப்யூட்டர் விலை உயர்ந்துள்ளது.
இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் வரிகள் உயர்த்தப்பட்டுள்ளதால், கம்ப்யூட்டர் விலை மேலும் அதிகரிக்கும். அதனால், கம்ப்யூட்டர் தேவை குறையும் என இத்துறையினர் தெரிவித்துள்ளனர்.மத்திய அரசு, 2012-13ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், கல்வித் தீர்வையை உள்ளடக்கிய உற்பத்தி வரியை,10.3 சதவீதத்தில் இருந்து 12.4 சதவீதமாக உயர்த்தியுள்ளது.இது தவிர, டி.வி.டி., ரைட்டர், சி.டி.,ரைட்டர்,பிளாஷ் டிரைவ், மைக்ரோ பிராசசர் உள்ளிட்ட முக்கிய உதிரி பாகங்களுக்கான இறக்குமதி எதிர் தீர்வை 5 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.இந்த வரி விதிப்பு, ரூபாயின் வெளிமதிப்பு வீழ்ச்சி போன்றவற்றால், இத்துறை மட்டுமின்றி, நுகர்வோரும் பாதிக்கப்படுவர்.
இது குறித்து, எம்.ஏ.ஐ.டி அமைப்பின் செயல் இயக்குனர் சபயசாட்சி பாத்ரா கூறும்போது, "ஏப்ரல் முதல் கம்பயூட்டர் மற்றும் உதிரி பாகங்களின் விலை 2-3 சதவீதம் வரை உயரும்' என்று தெரிவித்தார்.ஐடீசி நிறுவனத்தின் ஆய்வின்படி, இந்தியச் சந்தையில், சென்ற 2011ம் காலண்டர் ஆண்டில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான நான்காம் காலாண்டில் கம்ப்யூட்டர் வினியோகம், மூன்றாவது காலாண்டை விட 22.7 சதவீதம் குறைந்துள்ளது.
அதேசமயம், கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டுடன் ஒப்பிடும்போது, 3.8 சதவீதம் சரிவடைந்துள்ளது. இது, முந்தைய ஆறு காலாண்டுகளில் இல்லாத அளவிற்கு, மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.சப்ளை குறைவு மற்றும் ஹார்டு டிஸ்க் விலையேற்றம் ஆகியவற்றின் காரணமாக, மதிப்பீட்டு காலத்தில் கம்ப்யூட்டர் நிறுவனங்கள், கம்ப்யூட்டர் விலையை 5 -10 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன.
முதலில் தாய்லாந்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு காரணமாக, ஹார்டு டிஸ்க் விலை உயர்ந்தது. பின்னர் ரூபாய் வெளிமதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி யால், இறக்குமதி செலவினம் உயர்ந்தது. தற்போது, உற்பத்தி வரி உயர்வால், கம்ப்யூட்டர் துறை, மேலும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது என, லெனோவா இந்திய நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அமர்பாபு தெரிவித்தார்.
இந்த விலை உயர்வால், கம்ப்யூட்டருக்கான தேவை குறையும். மேலும், பழைய கம்ப்யூட்டருக்கு பதிலாக புதிய கம்ப்யூட்டரை வாங்க நினைப்பவர்களின் திட்டத்தைத் தள்ளிவைக்கும். அதே சமயம், மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை கம்ப்யூட்டர்களை மாற்றும் நிறுவனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என, கார்ட்னர் இந்தியா நிறுவனத்தின் முதன்மை ஆய்வாளர் விஷால் திரிவேதி தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|