பதிவு செய்த நாள்
15 மே2012
00:52
புதுடில்லி:நடப்பு பயிர் பருவத்தில், மே மாதம் 1ம் தேதி வரையிலுமாக, நாட்டின் உணவு தானியங்கள் கையிருப்பு, 21 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என, இந்திய உணவு கழகம் (எப்.சி.ஐ.) தெரிவித்துள்ளது. இந்திய உணவுக் கழகம், மாநில அரசுகளின் முகமை அமைப்புகள் ஆகியவை, விவசாயிகளிடமிருந்து உணவு தானியங்களை கொள்முதல் செய்து, அவற்றை சேமித்து வைத்து, பொது வினியோகத் திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் வழங்கி வருகின்றன.
இந்த வகையில், நடப்பு பருவத்தில், சென்ற 1ம் தேதி வரையிலுமாக, உணவு தானியங்கள் கையிருப்பு, 7.12 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய பருவத்தின், இதே காலத்தில் இருந்ததை விட, 21 சதவீதம் (5.92 கோடி டன்) அதிகமாகும்.மதிப்பீட்டு காலத்தில், கோதுமை கையிருப்பு, 3.14 கோடி டன்னிலிருந்து, 3.82 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. அரிசி கையிருப்பு, 2.87 கோடி டன்னிலிருந்து, 3.30 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
நடப்பு பயிர் பருவத்தில், முன் எப்போதும் இல்லாத சாதனை அளவாக, நெல் உற்பத்தி, 10.35 கோடி டன்னாகவும், கோதுமை உற்பத்தி, 8.83 கோடி டன்னாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.இதையடுத்து, நெல் 3.50 கோடி டன்னும், கோதுமை 3.20 கோடி டன்னும் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|