பதிவு செய்த நாள்
21 மே2012
14:41
நாடு முழுவதும் வாகன டயர்களுக்கான விலை மீண்டும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ருபாய் மதிப்பு குறைந்துள்ளதால், தவிர்க்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது என டயர் உற்பத்தியாளர்கள் கூறினாலும், செயற்கை விலையேற்றம் என டீலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டயர் உற்பத்திக்கு தேவையான இயற்கை ரப்பர் மற்றும் சிந்தடிக் ரப்பர் உள்ளிட்ட உற்பத்தி பொருட்கள் பெரும்பான்மையானவை, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவு, வரி உயர்வு உள்ளிட்ட காரணங்களை கூறி, கடந்த ஐந்து மாதங்களில் பல முறை டயர்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், ரூபாய் மதிப்பு தற்போது மேலும் சரிவடைந்துள்ளது. இதனால், இறக்குமதியாகும் உற்பத்தி பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, டயர்களின் விலை உயர்த்த வேண்டியது அவசியம் என்பது டயர் உற்பத்தியாளர்களின் கருத்தாக உள்ளது.
இது குறித்து, வாகன டயர் உற்பத்தியாளர்கள் சங்க டைரக்டர் ஜெனரல் ராஜிவ் புத்திராஜா கூறுகையில்,"" உற்பத்தி பொருட்களின் விலை, கடந்த ஓராண்டில், 45 சதவீதம் அதிகரித்து விட்டது. டயர் உற்பத்திக்கு, இயற்கை ரப்பர் மற்றும் சிந்தடிக் ரப்பர் ஆகியவை மிக முக்கியமானவை. இவை பெருமளவில், வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதில் சிந்தடிக் ரப்பர் என்பது, பெட்ரோலிய பொருட்கள் வகையை சேர்ந்தது. எனவே, கச்சா எண்ணெய் விலை உயரும் போது, சிந்தடிக் ரப்பர் விலையும் உயர்கிறது. ரூபாய் மதிப்பு சரிவால், இயற்கை ரப்பர் விலை உயர்கிறது. எனவே, தான் டயர்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது,'' என்றார். ஆனால், இதை டயர் டீலர்கள் ஏற்க மறுக்கின்றனர். ரூபாய் மதிப்பு உயரும் போது, உற்பத்தி பொருட்களின் விலை குறையும். அந்த நேரத்தில், டயர்களின் விலையை, உற்பத்தியாளர்கள் குறைப்பதில்லை. மேலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும், ரேடியல் டயர்களின் விலை, உள்நாட்டில் உற்பத்தியாகும் டயர்களின் விலையை விட குறைவு. தங்களின் தொழில் பாதிக்கும் என, டயர் உற்பத்தியாளர்கள் அரசிடம் முறையிட, இறக்குமதியாகும் ரேடியல் டயர்கள் மீது, பொருள் குவிப்பு தடுப்பு வரி கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. டயர்கள் விலை வாடிக்கையாளர்களை பாதிக்காத வகையில் இருக்க, பொருள் குவிப்பு தடுப்பு வரியை அரசு குறைக்க வேண்டும் என, அகில இந்திய டயர் டீலர்கள் கூட்டமைப்பின் அமைப்பாளர் எஸ்.பி.சிங் தெரிவித்துள்ளார். டீலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், விரைவில் டயர்கள் விலை உயரும் என்ற நிலையே காணப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|