பதிவு செய்த நாள்
06 ஜூன்2012
00:25
புதுடில்லி:நடப்பு 2011-12ம் சந்தைப்படுத்தும் பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்), நாட்டின் பருத்தி உற்பத்தி, 3.47 கோடி பொதிகளாக இருக்கும் என, பருத்தி ஆலோசனை வாரியம் (சி.ஏ.பீ.,) மறு மதிப்பீடு செய்துள்ளது. இது, முதல் மதிப்பீட்டில், 3.45 கோடி பொதிகளாக (1 பொதி-170 கிலோ) இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.பயன்பாடு:அதேசமயம், உள்நாட்டில், பருத்தி பயன்பாடு, நடப்பு பருவத்தில், 2.50 கோடி பொதிகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது, கடந்த பருவத்தில், 2.60 கோடி பொதிகள் என்றளவில் இருந்தது. மத்திய வேளாண் அமைச்சகம், நடப்பு 2011-12ம் வேளாண் பருவத்தில் (ஜூலை-ஜூன்), நாட்டின் பருத்தி உற்பத்தி, 3.52 கோடி பொதிகளாக இருக்கும் என மதிப்பீடு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பு பருவத்தில், சென்ற மே 27ம் தேதி வரையிலுமாக, பருத்தி சாகுபடி செய்யும் முக்கிய பகுதிகளிலிருந்து, சந்தைகளுக்கு, 3.22 கோடி பொதிகள் வந்துள்ளன. நாள் ஒன்றுக்கு சராசரியாக, 65 ஆயிரம் பொதிகள் என்றளவில் இதன் வரத்து உள்ளதாக, இந்திய பருத்தி கழகம் (சி.சி.ஐ.,) தெரிவித்துள்ளது.
நடப்பு சந்தையில், பல்வேறு தரம் கொண்ட, ஒரு கேண்டி (356 கிலோ) பருத்தியின் விலை, ஏப்ரல் 14ம் தேதி நிலவரப்படி, 34 ஆயிரத்து 700 முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை இருந்தது. அதேசமயம், கடந்த ஆண்டின் இதே காலத்தில், இதன் விலை, 50 ஆயிரத்து 500 முதல், 83 ஆயிரம் ரூபாய் வரை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்றுமதி:நடப்பு பருவத்தில், பருத்தி உற்பத்தி அதிகரிக்கும் என்ற மதிப்பீட்டால், மத்திய அரசு, 1.15 கோடி பருத்தி பொதிகளை ஏற்றுமதி செய்ய ஒப்புதல் வழங்கியிருந்தது. இந்நிலையில், விவசாயிகளின் நலன் கருதி, கூடுதல் பருத்தி ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என, மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதையடுத்து, பொது உரிமை அடிப்படையில், பருத்தி ஏற்றுமதி மீதான தடை விலக்கி கொள்ளப்பட்டது. கடந்த 2010-11ம் பருவத்தில், 78 லட்சம் பொதிகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. உலகளவில், பருத்தி உற்பத்தி மற்றும் அளிப்பில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.உற்பத்தி அதிகரிக்கும் என்ற மதிப்பீட்டால், ஏற்றுமதிக்கான தடை விலக்கி கொள்ளப்பட்டுள்ளது என்பது இந்திய ஜவுளி துறையை பாதிக்கும் என, உள்நாட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஏனெனில், கடந்த ஆண்டு, விலையுடன் ஒப்பிடும் போது, நடப்பாண்டில், இதன் விலை மிகவும் சரிவடைந்து உள்ளது. இதனால், பருத்தி, சாகுபடி செய்து வந்த, பல விவசாயிகள் மாற்று பயிர் சாகுபடிக்கு மாறி விடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் 2012-13ம் பருவத்தில், இதன் உற்பத்தி குறைவதுடன், பருத்தி கையிருப்பும் குறைந்து விடும்.
எனவே, மத்திய அரசு, பருத்தி ஏற்றுமதி குறித்து, மறு ஆய்வு செய்வதுடன், கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள உள்நாட்டு ஜவுளி துறையை, பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, இந்திய ஜவுளி துறை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், இந்திய ஜவுளி துறை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதை கருத்தில் கொண்டு, அண்மையில், மத்திய அரசு, ஜவுளி ஆலைகளின், 35 ஆயிரம் கோடி ரூபாய் கடனை, மறுசீரமைப்பு செய்வதற்கு, ஒப்புதல் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
மூலப்பொருட்கள் :ஏற்கனவே, இந்திய ஜவுளி துறை, இடர்பாட்டிற்கு உள்ளாகியுள்ள நிலையில், எந்த அளவிற்கு, பருத்தி ஏற்றுமதி செய்யப்பட உள்ளது என்பது தெரியாததால், வரும் பருவத்தில், இந்திய ஜவுளி துறைக்கு, போதிய அளவிற்கு, பருத்தி கிடைக்காமல் போகக் கூடும். மேலும், வரும் பருவத்தில், பருத்தி உற்பத்தி குறையும் நிலையில், இதன் விலையும் அதிகரிக்கும். அவ்வாறு, விலை உயர்ந்து, பருத்திக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையில், மூலப் பொருட்கள் இன்மையால், உள்நாட்டு ஜவுளி துறை மேலும் பாதிப்புக்குள்ளாகும் என, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|