பதிவு செய்த நாள்
06 ஜூன்2012
00:28
புதுடில்லி:சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்க நிலையால், இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதை கருத்தில் கொண்டு, ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், மத்திய தொழில் மற்றும் வர்த்தகம் அமைச்சகம் புதிய வர்த்தக கொள்கையை அறிவித்துள்ளது.
கைவினை பொருட்கள்:இதுகுறித்து மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா கூறியதாவது:
நாட்டின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், அரசு, பல்வேறு சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. இதன்படி, கைத்தறி, கைவினைப் பொருட்கள், தரை விரிப்புகள், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பெறும் கடனுக்கான, 2 சதவீத வட்டி மானியம், வரும் 2013ம் ஆண்டு மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, தொழிலாளர்கள் அதிகளவில் ஈடுபடும், பொம்மைகள், விளையாட்டு சாதனங்கள், ஆயத்த ஆடைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட வேளாண் பொருட்கள் ஆகிய துறைகளுக்கும் இந்த வட்டி மானிய சலுகை, ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏற்றுமதி மேம்பாட்டு கடன் உத்தரவாத திட்டத்தின் (இ.பி.சி.ஜி.) கீழ், வழங்கப்படும் கடனுக்கு, வட்டி இல்லாத நிலை, 2013ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, ஏற்றுமதி துறை நிறுவனங்கள் அவற்றின் தொழில்நுட்ப செயல்பாடுகளை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
டில்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களிலிருந்து, தபால், கூரியர் அல்லது இணையதள வர்த்தகம் மூலம் மேற்கொள்ளப்படும் ஏற்றுமதிக்கும் இந்த சலுகைகள் பொருந்தும் வகையில், இப்புதிய வர்த்தக கொள்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சென்ற 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் ஒட்டு மொத்த ஏற்றுமதி, 30 ஆயிரத்து 370 கோடி டாலராக இருந்தது. நடப்பு நிதியாண்டில் (2012-13), நாட்டின் ஏற்றுமதி, சென்ற நிதியாண்டை விட, 20 சதவீதம் வளர்ச்சி காணும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு ஆனந்த் சர்மா கூறினார்.
சிறப்பு பொருளாதார மண்டலங்கள்:புதிய வர்த்தக கொள்கை, அறிவிப்புடன், மத்திய அரசு, பொருளாதார மண்டலங்களுக்கும் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.
கடந்த 2008ம் ஆண்டில், சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, மத்திய அரசு, சிறப்பு பொருளாதார மண்டலங்களில் செயல்படும் நிறுவனங்களுக்கு, பல்வேறு சலுகைகளை அறிவித்திருந்தது.
பிறகு, ஏற்றுமதியில் ஓரளவிற்கு வளர்ச்சி ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த
2010-11ம் நிதியாண்டில், சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள நிறுவனங்களுக்கு, குறைந்தபட்ச மாற்று வரி (எம்.ஏ.டி.) மற்றும் டிவிடெண்டு வினியோக வரி உள்ளிட்டவை விதிக்கப்பட்டன.
இதனால், பல நிறுவனங்கள் சிறப்பு பொருளாதார மண்டலங்களில், தொழில் துவங்குவதை குறைத்து கொண்டன.இம்மண்டலங்களின் ஏற்றுமதியை மேம்படுத்தும் வகையில், தற்போது, இந்நிறுவனங்களுக்கு சலுகை அளித்து, மேற்கண்ட இரண்டு வரிகளையும் நீக்கும் வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கடந்த 2011-12ம் நிதியாண்டில், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் வாயிலான ஏற்றுமதி, 3 லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. இம்மண்டலங்களில், 8 லட்சத்து 45 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பணிபுரிந்து வருகின்றனர். இவ்வாறு ஆனந்த் சர்மா மேலும் கூறினார்.
அமோக வரவேற்பு:'அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையால், நாட்டின் ஏற்றுமதி குறைந்துள்ள நிலையில், மத்திய அரசு, தற்போது அறிவித்துள்ள சலுகை திட்டங்கள், நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சிக்கு வழிவகுக்கும்' என, 'பிக்கி' அமைப்பின் தலைவர் ஆர்.பி.கன்னோரியா தெரிவித்தார்.
'புதிய ஏற்றுமதி கொள்கையில், ஏற்றுமதியை மேம்படுத்தும் வகையில், அறிவிக்கப்பட்டுள்ள, ஏழு திட்டங்களும், வட்டி மானிய சலுகை ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதும் வரவேற்கத்தக்க அம்சங்களாகும்.
எங்களுடைய எதிர்பார்ப்பிற்கும் அதிகமாகவே சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன' என இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைவர் ரபீக் அகமது தெரிவித்தார்.ஜவுளி துறை:இது குறித்து, ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர் ஏ.சக்திவேல் கூறும்போது, 'ஏற்றுமதி சலுகைகள், சரியான நேரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது, ஒட்டு மொத்த ஜவுளி துறையின் ஏற்றுமதிக்கு ஊக்கமளிக்கும்' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|