பதிவு செய்த நாள்
08 ஜூன்2012
00:35
புதுடில்லி:கடந்த 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் நிகர நேரடி வரி வசூல், 4 லட்சத்து 95 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, இதற்கு முந்தைய 2010-11ம் நிதியாண்டில், திரட்டப்பட்ட தொகையை விட, 10.74 சதவீதம் (4 லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகமாகும் என, மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மந்த நிலை:இருப்பினும், இது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கு அளவான, 5 லட்சம் கோடி ரூபாயை விட குறைவாகும். கடந்த நிதியாண்டில், நேரடி வரி வசூல் வாயிலாக, முதலில், 5 லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், பொருளாதார மந்த நிலையை கருத்தில் கொண்டு, மத்திய அரசு, இந்த இலக்கை, 5 லட்சம் கோடி ரூபாயாக குறைத்தது.முந்தைய 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் நேரடி வரி வசூல், அதற்கு முந்தைய நிதியாண்டை விட, 18 சதவீதம் வளர்ச்சிகண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற நிதியாண்டில், நாட்டின் ஒட்டுமொத்த நேரடி வரி வசூல், அதற்கு முந்தைய நிதியாண்டை விட, 13.02 சதவீதம் அதிகரித்து, அதாவது, 5 லட்சத்து 22 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து, 5 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இந்நிலையில், கூடுதலாக வரி செலுத்தியவர்களுக்கு, சென்ற நிதியாண்டில், 95 ஆயிரம் கோடி ரூபாய் திரும்ப அளிக்கப்பட்டது. இதனால், நிகர நேரடி வரி வசூல் குறைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.கடந்த 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 6.9 சதவீதமாக இருக்கும் என, முன்
கூட்டிய மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பொருளாதார வளர்ச்சி:ஆனால், மத்திய புள்ளியியல் துறையின், புள்ளி விவரத்தில், சென்ற நிதியாண்டில், நாட்டின் பொருளதார வளர்ச்சி, 6.5 சதவீதமாக குறைந்துள்ளது என, அறிவித்துள்ளது. பொருளாதார சுணக்க நிலையால் தான், நேரடி வரி வசூல் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்ற நிதியாண்டில், இந்திய நிறுவனங்கள், செலுத்திய மொத்த வரி, முந்தைய நிதியாண்டை விட, 11.52 சதவீதம் அதிகரித்து, 3 லட்சத்து 55 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து, 3 லட்சத்து 96 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
வருமான வரி:இதேபோன்று, தனிநபர் வருமான வரி, 16.20 சதவீதம் வளர்ச்சிகண்டு, 1 லட்சத்து 66 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து, 1 லட்சத்து 93 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.அதேசமயம், பங்கு பரிவர்த்தனை வரி, 20.95 சதவீதம் குறைந்து, 7,185 கோடி ரூபாயிலிருந்து, 5,656 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இருப்பினும், இதே ஆண்டுகளில், செல்வ வரி, 14.56 சதவீதம் உயர்ந்து, 687 கோடி ரூபாயிலிருந்து, 787 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என, இவ்வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|