பதிவு செய்த நாள்
09 ஜூன்2012
01:18
புதுடில்லி:அமெரிக்காவின் நிர்பந்தத்தால், இந்தியா, சென்ற மே மாதம் ஈரானில் இருந்து இறக்குமதியாகும் கச்சா எண்ணெய் அளவை, 38 சதவீதம் குறைத்துக் கொண்டுள்ளது. தொடர்ந்து இரண்டாவது மாதமாக, ஈரானில் இருந்து குறைந்த அளவிற்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார தடை:ஈரான் நாட்டில் உள்ள அணு உலைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி வரும் அமெரிக்கா, அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. மேலும், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்வதைக் கைவிடவேண்டும் என்று அமெரிக்கா, உலக நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இதையடுத்து, ஜப்பான் மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்துக் கொண்டன. இதனால், இந்நாடுகள் மீது விதிக்கப்பட்டிருந்த ஒரு சில தடைகளை அமெரிக்கா விலக்கிக் கொண்டது.அது போன்று, இந்தியாவும் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைக் குறைத்துக் கொண்டுள்ளது. இதனால், குறிப்பாக, வங்கித் துறையில் விதிக்கப்பட்டுள்ள தடைகளை அமெரிக்கா அகற்றும் என, மத்திய அரசு எதிர்பார்க்கிறது. எனினும், இது குறித்து அதிகாரபூர்வமாக கோரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என, அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தியா, சென்ற மே மாதம் நாளொன்றுக்கு, 2 லட்சத்து 43 ஆயிரம் பீப்பாய் கச்சா எண்ணெயை ஈரானில் இருந்து இறக்குமதி செய்து கொண்டது. இது, முந்தைய ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியை விட, 10 சதவீதமும், சென்ற ஆண்டு மே மாத இறக்குமதியை விட, 38 சதவீதமும் குறைவாகும். நடப்பாண்டு ஏப்ரல் மாதம், நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி, சென்ற ஆண்டின் இதே மாதத்தை விட, 40 சதவீதம் குறைந்துள்ளது.
சென்ற 2011ம் ஆண்டு, மே மாதம் இந்தியா, நாளொன்றுக்கு, 3 லட்சத்து 94 ஆயிரம் பீப்பாய் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தது. இந்தியா, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் வரிசையில், ஈரான் மூன்றாம் இடத்தில் இருந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக அந்நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்துள்ளதால், ஈரான் ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளின் தடையால், வரும் ஜூலை மாதம் முதல், ஈரானில் இருந்து வரும் கச்சா எண்ணெய் கப்பல்களுக்கான காப்பீட்டுத் தொகை குறைக்கப்பட உள்ளது. காப்பீடு:இதனால், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள், ஈரானில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வது மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்கொரியாவும், வரும் மாதம் முதல் ஈரானில் இருந்து அனைத்து பொருட்களின் இறக்குமதியை நிறுத்த திட்டமிட்டுள்ளது. எண்ணெய் கப்பல்களுக்கு, ஜப்பானிய அரசு, காப்பீட்டு உத்தரவாதம் வழங்காத பட்சத்தில், அந்நாட்டு எண்ணெய் நிறுவனங்களும் ஈரானில் இருந்து அனைத்து பொருட்களையும் இறக்குமதி செய்வதை நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|