பதிவு செய்த நாள்
11 ஜூன்2012
13:30
பெட்ரோல் விலை தாறுமாறாக ஏறியுள்ளதால், பெட்ரோல் கார்களின் விற்பனை குறைந்துள்ளது. இதன் காரணமாக, மிகவும் சிறப்பாக விற்பனையாகும் ஆல்டோ கார் உட்பட, பெட்ரோல் கார்களின் உற்பத்தியை மாருதி சுசூகி நிறுவனம் குறைத்துள்ளது.
கடந்த மாதம் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு, ரூ.7.50 உயர்த்தப்பட்டது. கடும் எதிர்ப்பு காரணமாக, இந்த மாத துவக்கத்தில், லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டது. இருந்தாலும், பெட்ரோல் மற்றும் டீஸல் விலைகளில் உள்ள வித்தியாசம் அதிகமாகவே காணப்படுகிறது. இதன் எதிரொலியாக, பெட்ரோல் கார்கள் விற்பனை குறைந்தும், டீஸல் கார்களின் தேவை அதிகரித்தும் உள்ளது.இந்த சூழ்நிலையில், பெட்ரோல் கார்களின் உற்பத்தியை மாருதி சுசூகி நிறுவனம் குறைத்துள்ளது.
இது குறித்து நிறுவனத்தின் உயர் அதிகாரி மயாங்க் பரீக் கூறியதாவது:
ஆல்டே, மாருதி 800, ஏ -ஸ்டார், எஸ்திலோ மற்றும் ஆம்னி ஆகிய பெட்ரோல் மாடல் கார்களின் உற்பத்தி, மூன்று நாட்களுக்கு நிறுத்தப்பட்டது. பொதுவாக, பெட்ரோல் கார்கள், மூன்று வாரத்துக்கு தேவையான ஸ்டாக் இருக்கும். ஆனால், பெட்ரோல் கார்கள் விற்பனை குறைந்ததால், தற்போது நான்கரை வாரங்களுக்கு தேவையான ஸ்டாக் உள்ளது. எனவே தான், மே மாதம் 25, 26 ஆகிய நாட்களிலும், ஜூன் 2ம் தேதியும், பெட்ரோல் கார்கள் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த மூன்று நாட்களில், 8,500 பெட்ரோல் கார்கள் உற்பத்தியாகவில்லை.தொடர்ந்து நான்கு மாதங்களாக முன்னேற்ற பாதையில் இருந்த, மாருதி சுசூகி நிறுவன கார்களின் விற்பனை, மே மாதம் சரிவை சந்தித்தது. முந்தைய மாதத்தை விட, 4.99 சதவீதம் குறைந்து, 98, 884 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தன. அதிகளவில் விற்பனையாகும், பட்ஜெட் கார்கள் என்று அழைக்கப்படும், மாருதி 800, ஏ -ஸ்டார், ஆல்டோ, வேகன் ஆர் ஆகிய கார்களின் விற்பனை, 29.03 சதவீதம் குறைந்து, 29, 895 கார்கள் மட்டுமே விற்பனையாகின. கடந்த ஆண்டு மே மாதத்தில், 42, 125 கார்கள் விற்பனையாகி இருந்தன.இவ்வாறு மயாங்க் பரீக் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|