பதிவு செய்த நாள்
22 ஜூன்2012
12:09
இந்தியாவில் சமீபத்தில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்ட பிறகு, பெட்ரோல் மற்றும் டீஸல் விலைகளுக்கு இடையேயான வித்தியாசம், கிடுகிடுவென உயர்ந்து விட்டது. அதே போல, டீஸல் கார்களின் விற்பனையும் அதிகரித்து வருகிறது. ஆனால், டீஸல் விலையை உயர்த்துவதில் மத்திய அரசு தயக்கம் காட்டி வருகிறது. மானிய விலையில் கிடைக்கும் டீஸலில்,15 முதல் 20 சதவீதம், கார்கள் மற்றும் சொகுசு கார்கள் அனுபவிக்கின்றன. இது, ரூ.8,000 கோடி மதிப்புடையது என்பது, பெட்ரோலிய அமைச்சகத்தின் வாதம். இப்பிரச்னையை தவிர்க்க, டீஸல் கார்களுக்கு ஒரே கட்டமாக, ரூ.80,000 வரை வரியை உயர்த்தலாம் என்று, கடந்த ஆண்டே கிரீத் பரீக் கமிட்டி, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. சமீபத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது, டீஸல் கார்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகவில்லை. இதன் பிறகு தான், பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, சிறிய ரக டீஸல் கார்களுக்கு, ரூ.1.75 லட்சம் வரையும், பெரிய ரக டீஸல் கார்களுக்கு, ரூ.2.50 லட்சம் வரையும், வரியை உயர்த்தலாம் என்று பெட்ரோலிய துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி, சில நாட்களுக்கு முன், மத்திய நிதி அமைச்சகத்துக்கு கடிதம் எழுதினார். இது தொழில்துறையை கடுமையாக பாதிக்கும் என்று இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம்( சியாம்) கருத்து தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர் தலைமையில் செயல்படும் கனரக தொழிற்சாலைகள் அமைச்சகமும், பெட்ரோலிய துறை அமைச்சகத்தின் பரிந்துரைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுபோல் வரியை உயர்த்தினால், இந்தியாவில் யாரும் முதலீடு செய்ய மாட்டார்கள், தொழில்துறையே படுத்துவிடும் என்பது, இந்த அமைச்சகத்தின் கருத்தாக உள்ளது.
அதே போல கார் நிறுவனங்களும் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவன துணை தலைவர் பாலேந்திரன் கூறுகையில்,"" டீஸல் விலையில் ஒரு ரூபாய் உயர்த்தினால், மத்திய அரசுக்கு கூடுதலாக, ரூ.6,000 கோடி வருவாய் கிடைக்கும். அதே நேரத்தில் கார்களுக்கான வரியை 5 சதவீதம் அளவுக்கு உயர்த்தினால், ரூ.2,500 கோடி தான் கிடைக்கும்,'' இதை மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இப்படியாக, டீஸல் கார்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் விவகாரத்தில் மத்திய அரசில் சடுகுடு விளையாட்டு தான் நடந்து கொண்டிருக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|