பதிவு செய்த நாள்
01 ஆக2012
10:29
புதுடில்லி : வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு, 1,900 கோடி ரூபாய் மதிப்பிலான, நிவாரண உதவிகளை வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன், அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள பயிர்களை காக்கும் வகையில், விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் டீசல் வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
வழக்கத்துக்கும் மாறாக, இந்த ஆண்டு பருவமழை, சரிவர பெய்யாததால், பல மாநிலங்களில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து, மத்திய விவசாய அமைச்சர் சரத்பவாரை தலைவராகக் கொண்டு செயல்படும், வறட்சி தொடர்பான, அமைச்சர்கள் அடங்கிய அதிகார குழுவின் கூட்டம் நேற்று நேற்று நடைபெற்றது. இதில், வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு, 50 சதவீத மானிய விலையில் டீசல் வழங்கும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில், டீசலுக்கு வழங்கப்படும் 50 சதவீத மானியத்தை, மத்திய அரசும், மாநில அரசும் சரிசமமாக பங்கிட்டுக் கொள்ளும்.
இது குறித்து சரத்பவார் மேலும் கூறியதாவது: பருவமழை பொய்த்ததால், 306 மாவட்டங்களில் குறைவாகவும், 94 மாவட்டங்களில் மிகக் குறைவாகவும் மழை பெய்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, பயிரிடப்பட்ட பகுதிகளும் குறைந்து போய்விட்டன. இதன் காரணமாக, காரீப் பருவ பயிர்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு சரத்பவார் கூறினார்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|