பதிவு செய்த நாள்
01 ஆக2012
23:46
புதுடில்லி: சென்ற ஜூன் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, 2,510 கோடி டாலராக (1.38 லட்சம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, (2,660 கோடி டாலர்) 5.45 சதவீதம் குறைவு என, மத்திய வர்த்தகம் அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய நாடுகள்இந்திய பொருட்களுக்கு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் முக்கிய ஏற்றுமதி சந்தைகளாகத் திகழ்கின்றன. சர்வதேச பொருளாதார நெருக்கடியால், குறிப்பாக, ஐரோப்பிய நாடுகள் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. இதனால், நாட்டின் ஏற்றுமதி தொடர்ந்து இரண்டாவது மாதமாக பாதிக்கப்பட்டுள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், நாட்டின் இறக்குமதி, 13.46 சதவீதம் குறைந்து, 4,070 கோடி டாலர் (2.24 லட்சம் கோடி ரூபாய்) என்ற அளவிலிருந்து, 3,540 கோடி டாலராக (1.95 லட்சம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது. இதையடுத்து, நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை, 1,030 கோடி டாலராக (56,650 கோடி ரூபாய்) இருந்தது.கச்சா எண்ணெய் இறக்குமதி, 4.43 சதவீதம் குறைந்து, 1,268 கோடி டாலராகவும், எண்ணெய் அல்லாத இதர பொருட்களின் இறக்குமதி, 17.80 சதவீதம் குறைந்து, 2,268 கோடி டாலராகவும் இருந்தது.நடப்பு 2012-13ம் நிதியாண்டின் முதல் காலாண்டில், நாட்டின் ஏற்றுமதி, 7,520 கோடி டாலராக (4.13 லட்சம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது. இது, முந்தைய 2011-12ம் நிதியாண்டின் இதே காலாண்டை விட, (7,650 கோடி டாலர் (4.20 லட்சம் கோடி ரூபாய்) 1.7 சதவீதம் குறைவாகும்.இறக்குமதிகணக்கீட்டு காலாண்டில், இறக்குமதியும், 6.10 சதவீதம் குறைந்து, 12,274 கோடி டாலர் (6.75 லட்சம் கோடி ரூபாய்) என்ற அளவிலிருந்து, 11,525 கோடி டாலராக (6.33 லட்சம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது. இதையடுத்து, வர்த்தகப் பற்றாக்குறை, 4,005 கோடி டாலராக (2.20 லட்சம் கோடி ரூபாய்) இருந்தது.இதே காலத்தில்,கச்சா எண்ணெய் இறக்குமதி, 5.48 சதவீதம் அதிகரித்து, 3,942 கோடி டாலரிலிருந்து, 4,158 கோடி டாலராக உயர்ந்துள்ளது. அதேசமயம், எண்ணெய் அல்லாத இதர பொருட்களின் இறக்குமதி, 11.57 சதவீதம் குறைந்து, 7,367 கோடி டாலராக இருந்தது.இது குறித்து, வர்த்தக செயலர் எஸ்.ஆர்.ராவ் கூறும்போது, "சர்வதேச பொருளாதார சுணக்க நிலையால், பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது' என்றார்.சலுகை திட்டங்கள்மத்திய அரசு, நாட்டின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், அரசு, பல்வேறு சலுகைத் திட்டங்களை கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. இதன்படி, கைத்தறி, கைவினைப் பொருட்கள், தரை விரிப்புகள், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பெறும் கடனுக்கான, 2 சதவீத வட்டி மானியம், வரும் 2013ம் ஆண்டு மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுதவிர, தொழிலாளர்களின் பங்களிப்பு அதிகமுள்ள, பொம்மைகள், விளையாட்டு சாதனங்கள், ஆயத்த ஆடைகள், பதப்படுத்தப்பட்ட வேளாண் பொருட்கள் உள்ளிட்ட துறைகளுக்கும், வட்டி மானிய சலுகை, ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.வட்டி தள்ளுபடிமேலும், ஏற்றுமதி மேம்பாட்டு கடன் உத்தரவாத திட்டத்தின் (இ.பி.சி.ஜி.) கீழ் பெறும் கடனுக்கான வட்டி தள்ளுபடி, 2013ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, ஏற்றுமதி துறை நிறுவனங்கள், அவற்றின் தொழில்நுட்ப செயல்பாடுகளை மேம்படுத்திக் கொள்ள முடியும்.டில்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களிலிருந்து, தபால், கூரியர் அல்லது இணையதள வர்த்தகம் மூலம் மேற்கொள்ளப்படும் ஏற்றுமதிக்கும் இந்த சலுகைகள் பொருந்தும் வகையில், இப்புதிய வர்த்தகக் கொள்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.கடந்த 2008ம் ஆண்டில் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, மத்திய அரசு, சிறப்பு பொருளாதார மண்டலங்களில் செயல்படும் நிறுவனங்களுக்கு, பல்வேறு சலுகைகளை அறிவித்திருந்தது.டிவிடெண்டு வினியோக வரிபின்னர், ஏற்றுமதி வளர்ச்சி கண்டதையடுத்து, கடந்த 2010-11ம் நிதியாண்டில், சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள நிறுவனங்களுக்கு, குறைந்தபட்ச மாற்று வரி (எம்.ஏ.டி.) மற்றும் டிவிடெண்டு வினியோக வரி ஆகியவை விதிக்கப்பட்டன. இதனால், பல நிறுவனங்கள் சிறப்பு பொருளாதார மண்டலங்களில், தொழில் துவங்குவதைக் குறைத்துக் கொண்டன.அதனால், இம்மண்டலங்களின் ஏற்றுமதியை மேம்படுத்தும் நோக்கில், மேற்கண்ட இரண்டு வரிகளையும் நீக்கும் வகையில், அரசின் சலுகைத் திட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நடப்பு முழு நிதியாண்டில் (2012-13), நாட்டின் ஏற்றுமதி, சென்ற நிதியாண்டை விட, 20 சதவீதம் வளர்ச்சி காணும் என மதிப்பிடப்பட்டுள்ளது.சென்ற 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் ஒட்டு மொத்த ஏற்றுமதி, 30,370 கோடி டாலராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|