பதிவு செய்த நாள்
11 ஆக2012
00:05
புதுடில்லி:நடப்பு 2012-13ம் நிதியாண்டின், ஜூன் வரையிலான முதல் காலாண்டில், அன்னிய நிதி நிறுவனங்கள் (எப்.ஐ.ஐ.,), இந்திய நுகர்பொருள் துறை நிறுவனங்களில், மேற்கொண்ட முதலீடு அதிகரித்துள்ளது.
செயல்பாடு:இந்தியாவில், செயல்படும் நுகர்பொருள் துறை நிறுவனங்களின் செயல்பாடு நன்கு உள்ளதை அடுத்து, எப்.ஐ.ஐ., களின் பங்கு முதலீடு உயர்ந்துள்ளதாக, மும்பையை சேர்ந்த ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில்தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த முதல்காலாண்டில், பங்குகளின்சந்தை மதிப்பு அடிப்படையில், முன்னணியில் உள்ள நுகர்பொருள் துறையில் உள்ள நிறுவனங்களில், எப்.ஐ.ஐ.-கள் முதலீடு அதிகரித்துள்ளது.
அதேசமயம், உள்நாட்டில் உள்ள பரஸ்பர நிதி நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் நடுத்தர அளவில், பங்குகளின் சந்தை மதிப்பை கொண்ட நிறுவனங்களில், முதலீடுகளை அதிகரித்துக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பங்கு மூலதனம்:நுகர்பொருள் துறையில், 16 நிறுவனங்களுள், 11 நிறுவனங்களில், எப்.ஐ.ஐ.,-கள் அவற்றின் பங்கு மூலதனத்தை அதிகரித்து கொண்டுள்ளன. அதேசமயம், ஐந்து நிறுவனங்களில், பங்கு மூலதனத்தை குறைத்து கொண்டுள்ளன.பிரிட்டானியா, ஜோதி லேபரட்டரீஸ், இந்துஸ்தான் யூனிலீவர், கோத்ரெஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் ஆகிய நான்கு நிறுவனங்களில், எப்.ஐ.ஐ.-கள், கணக்கீட்டு காலாண்டில், கூடுதலாக, 1 சதவீதத்திற்கும் அதிகமாக பங்கு மூலதனத்தை உயர்த்திக் கொண்டுள்ளன.
இவை தவிர, ஐ.டி.சி., மாரிக்கோ, பஜாஜ் கார்ப்., கோல்கேட், சைடஸ் வெல்னெஸ், ஏசியன் பெயின்ட்ஸ், பெர்ஜர் பெயின்ட்ஸ் ஆகிய நிறுவனங்களிலும் எப்.ஐ.ஐ.-கள், அவற்றின் பங்கு மூலதனத்தை அதிகரித்து கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.அதேசமயம், யுனைடெட் ஸ்பிரிட்ஸ், ஜி.எஸ்.கே.கன்ஸ்யூமர் ஹெல்த்கேர், தாபர், இமாமி மற்றும் நெஸ்லே ஆகிய ஐந்து நிறுவனங்களில், எப்.ஐ.ஐ.-கள் அவற்றின் பங்கு மூலதனத்தை குறைத்து கொண்டுள்ளன.
தற்போதைய நிலையில், மற்ற துறைகளை விட, நுகர்பொருள் துறை நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாப வரம்பு சிறப்பாக உள்ளது. இதனால், இவற்றின் பங்குகளின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால், எப்.ஐ.ஐ.-கள், நுகர்பொருள் துறை நிறுவனங்களில், அவற்றின் பங்கு மூலதனத்தை அதிகரித்து கொண்டுள்ளதாக, ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு நிதி நிறுவனங்கள்:கணக்கீட்டு காலாண்டில், உள்நாட்டு நிதி நிறுவனங்கள், நுகர்பொருள் துறையை சேர்ந்த, ஏழு நிறுவனங்களில், அவற்றின் பங்கு மூலதனத்தை உயர்த்தி கொண்டுள்ளன. ஒன்பது நிறுவனங்களில், அவற்றின் பங்கு மூலதனத்தை குறைத்து கொண்டுள்ளன.
நடப்பு நிதியாண்டின் ஏப்.,- ஜூன் மாத காலாண்டில், உள்நாட்டில் பங்கு வர்த்தகம் அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருந்ததால், அன்னிய நிதி நிறுவனங்கள், அக்காலாண்டில், இந்திய பங்குச் சந்தைகளில், அவற்றின் முதலீட்டை குறைத்து கொண்டதுடன், 1,957 கோடி ரூபாயை விலக்கி கொண்டன. அதேசமயம், ஜன., முதல் மார்ச் வரையிலான காலாண்டில், இந்நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொண்ட நிகர முதலீடு, 44 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது.
முதலீடு குறைப்பு:கடந்த ஓராண்டாக, அன்னிய நிதி நிறுவனங்கள், மாரிக்கோ, ஜோதி லேபரேட்டரீஸ், தாபர், யுனைடெட் ஸ்பிரிட்ஸ், சைடஸ் வெல்னஸ் ஆகிய நிறுவனங்கள் நீங்கலாக, இதர நிறுவனப் பங்குகளில், அவற்றின் முதலீடுகளை அதிகரித்துக் கொண்டுள்ளன.அதே சமயம், இதே காலத்தில், உள்நாட்டு நிதி நிறுவனங்கள், மாரிக்கோ, இமாமி, ஜோதி லேபரேட்டரீஸ்,தாபர், மற்றும் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் ஆகிய நிறுவனங்கள் தவிர, இதர நிறுவன பங்குகளில், அவற்றின் முதலீடுகளை குறைத்துக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|