பதிவு செய்த நாள்
13 ஆக2012
23:42
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -சர்வதேச பொருளாதார நெருக்கடியால், நாட்டின் விருந்தோம்பல் துறையின் வளர்ச்சி, வரும் மாதங்களில் மேலும் சுணக்கம் காணும் என தெரிகிறது. குறிப்பாக, இத்துறையில், ஓட்டல் அறைகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 5 சதவீதம் குறையும் என்றும், அறைகளின் வாடகை, 5 முதல் 10 சதவீதம் வரை குறையக் கூடும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.பொருளாதார நெருக்கடிகடந்த 2008ம் ஆண்டில், ஏற்பட்ட சர்வதேச பொருளாதார மந்த நிலையால், ஓட்டல்களை உள்ளடக்கிய விருந்தோம்பல் துறையின் வளர்ச்சி கடும் சரிவை கண்டது. இதையடுத்து, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர், நடப்பு நிதியாண்டில், அது போன்ற நிலையை ஓட்டல் துறை சந்திக்கும் என தெரிகிறது. இதன்படி, ஓட்டல் அறைகளை பயன்படுத்துவோர் எண் ணிக்கை குறையும் என்பதுடன், அறை வாடகை வளர்ச்சியும் சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதை உறுதிப்படுத்தும் விதத்தில், நடப்பு நிதியாண்டின், ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில், உள்நாட்டில் விருந்தோம்பல் துறையில் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனங்களின் லாபம் குறைந்து போயுள்ளது.ஒபராய் குழுமம்ஒபராய் குழுமத்தை சேர்ந்த ஈஸ்ட் இந்தியா ஓட்டல் (ஈ.ஐ. எச்.,), ஒபராய் மற்றும் டிரைடன்ட் என்ற பிராண்டு பெயரில், ஓட்டல், ரிசார்ட்டுகளை நடத்தி வருகிறது. இந்நிறுவனம், சென்ற ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், 9.45 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டை விட, 38.83 சதவீதம் குறைவாகும்.இதுகுறித்து இக்குழுமத்தின் தலைவர் ஒபராய் கூறும்போது, "விருந்தோம்பல் துறையின் செயல்பாடு, பொருளாதார வளர்ச்சி மற்றும் முதலீட்டாளர் நம்பிக்கையோடு தொடர்பு கொண்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, நாம் சார்ந்துள்ள நாடுகளின் பொருளாதாரம், நிலையற்றதாக உள்ளது என்பது தான் வேதனை' என்றார். இந்தியன் ஓட்டல்ஸ்தாஜ் குழுமம் என்ற பெயரில், ஓட்டல்களை நடத்தி வரும் இந்தியன் ஓட்டல்ஸ் கம்பெனி (ஐ.எச்.சி.,), சென்ற முதல் காலாண்டில், 33.40 கோடி ரூபாயை நிகர இழப்பாக கண்டுள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில், 22.30 கோடி ரூபாயாக இருந்தது.நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நாடு தழுவிய அளவில், ஓட்டல் அறைகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, சராசரியாக, 10 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதனால், அறைகளுக்கான சராசரி கட்டணத்தை உயர்த்த முடியாத நிலையில் ஓட்டல் நிறுவனங்கள் உள்ளன.பின்னடைவுகடந்த 2007-08ம் ஆண்டில், ஓட்டல் அறையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை வளர்ச்சி, மைனஸ் 3.6 சதவீதம் என்றளவில் பின்னடைவை கண்டிருந்தது. இது, 2009-10ம் ஆண்டில், 7.8 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டது. இந்நிலையில், சென்ற நிதியாண்டில், ஓட்டல் அறையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை வளர்ச்சி, 1.4 சதவீதமாக குறைந்திருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது.இதேபோல், கடந்த 2007-08ம் ஆண்டில், 7,989 ரூபாய் என்ற அளவில் இருந்த ஓட்டல் அறையின் சராசரி கட்டணம், 2010-11ம் ஆண்டில், 6,800 ரூபாயாக குறைந்துள்ளது. இது, சென்ற நிதியாண்டில், 1.4 சதவீதம் குறைந்து, 6,700 ரூபாய் என்றளவில் சரிவடைந்திருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.தற்போது, ஓட்டல் அறைகள், தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. அதேசமயம், அவற்றை பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்தியாவில், கடந்த 2006-07ம் ஆண்டில், 39,285 ஓட்டல் அறைகள் இருந்தன. இது, 2009-10ம் ஆண்டில், 62,404 ஆகவும், 2010-11ம் ஆண்டில், 71,531 ஆகவும் அதிகரித்துள்ளது. ஆக, ஒராண்டில், கூடுதலாக, 9,127 அறைகள் உருவாகியுள்ளன. சர்வதேச பிராண்டுகள் வரும், 2015-16ம் ஆண்டில், மொத்த அறைகளின் எண்ணிக்கை, 1,02,438 என்றளவில் இருக்கும் என, தனியார் ஆய்வு நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது. புதிய சர்வதேச பிராண்டுகள் விரிவடைந்து இருப்பதன் காரணமாக, பல முக்கிய நகரங்களில், சொகுசு அறைகளுக்கான தேவை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், ஓட்டல் அறைகளுக்கான தேவை குறைந்துள்ள நிலையிலும், மூன்றாவது காலாண்டில், விறுவிறுப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பண்டிகை காலம் துவங்குவதே இதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|