பதிவு செய்த நாள்
18 ஆக2012
00:17
புதுடில்லி:நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு 2012-13ம் நிதியாண்டில், 6.7 சதவீதமாக இருக்குமென, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் சி.ரங்கராஜன் தெரிவித்தார்."2012-13ம் நிதியாண்டிற்கான பொருளாதார கண்ணோட்டம்' என்ற ஆய்வு அறிக்கையை, ரங்கராஜன், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளித்தார்.இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 6.7 சதவீதமாக நிலை நிறுத்திட மத்திய அரசு, பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்' என, தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கி:சர்வதேச பொருளாதார சுணக்க நிலை, பணவீக்கம் அதிகரிப்பு, பருவமழை குறைவால் வேளாண் உற்பத்தியில் பாதிப்பு போன்றவற்றால், நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்குமென ரிசர்வ் வங்கி, அண்மையில் மறுமதிப்பீடு செய்திருந்தது. ஆனால், கிரிசில் மற்றும் மூடீஸ் உள்ளிட்ட ஆய்வு நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 5.5 சதவீதமாகத் தான் இருக்குமென மதிப்பீடு செய்திருந்தன. இந்நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டீ.பி) 6.7 சதவீதமாக இருக்குமென ரங்கராஜன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2011-12ம் நிதியாண்டில், கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, பொருளாதார வளர்ச்சி, 6.5 சதவீதம் என்றளவில் மிகவும் சரிவடைந்திருந்தது. அன்னிய முதலீடு:மத்திய அரசு, பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே மேற்கண்ட பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும். குறிப்பாக, பன்முக பிராண்டு சில்லரை விற்பனையில், அன்னிய முதலீட்டிற்கு அனுமதி அளிக்க வேண்டும். டீசல் விலையை இரண்டு அல்லது மூன்று தவணைகளில் உயர்த்த வேண்டும். அவ்வாறு உயர்த்தும்பட்சத்தில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அளிக்கும் மானியச் சுமை குறையும்.
மானிய விலையில் அளிக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில், நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், பரஸ்பர நிதி மற்றும் காப்பீடு திட்டங்களில் அதிகளவில் முதலீடு மேற்கொள்ளும் வகையில், ஊக்குவிப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டும்.
மேலும், அன்னிய விமானச் சேவை நிறுவனங்கள், இந்தியாவில் இத்துறையில் ஈடுபடும் நிறுவனங்களில், 49 சதவீத அளவிற்கு முதலீடு மேற்கொள்ளும் வகையில், அனுமதி அளிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என, ரங்கராஜன் தெரிவித்தார்.பல்வேறு மாநிலங்களில், போதிய அளவிற்கு மழை இல்லாததால், நடப்பு நிதியாண்டில், வேளாண் உற்பத்தி வளர்ச்சி, 0.5 சதவீதம் என்றளவில் தான் இருக்கும்.
இது, கடந்த நிதியாண்டில், 2.8 சதவீதமாக இருந்தது. வேளாண் உற்பத்தி குறையும் நிலையில், அது, பணவீக்க அதிகரிப்பிற்கு வழிவகுக்கும். என்றாலும், நடப்பு நிதியாண்டின் இறுதியில், நாட்டின் பணவீக்கம் 6.5 - 7 சதவீதம் என்றளவில் இருக்குமென இக்குழு, மதிப்பிட்டுள்ளது.தயாரிப்பு துறை:நடப்பு நிதியாண்டின், இரண்டாவது அரையாண்டில், தயாரிப்புத் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 4.5 சதவீதமாக உயரும்.
அதேபோன்று, சுரங்கத் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 4.4 சதவீதமாகவும், மின் உற்பத்தி துறையின் வளர்ச்சி, 8 சதவீதமாகவும் இருக்கும்.மேலும், கட்டமைப்பு மற்றும் சேவை துறைகளிலும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உள்ளன. வர்த்தக பற்றாக்குறை, 18,110 கோடி டாலராக இருக்கும். உள்நாட்டு சேமிப்பு 31.7 சதவீதமாக இருக்க வாய்ப்புள்ளது என, ரங்கராஜன் மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|