பதிவு செய்த நாள்
05 செப்2012
00:06
சென்னை:பொருளாதார மந்தநிலையிலும், முதலீட்டிற்கு சிறந்த வருவாய் அளிக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு தனியார் நிறுவனங்களிடம் வரவேற்பு அதிகரித்து வருகிறது.மத்திய, மாநில அரசுப் பணியாளர்கள் மட்டுமின்றி, தனியார் நிறுவன ஊழியர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், சுயதொழில் செய்வோர் என, அனைத்துத் தரப்பினரும் ஓய்வூதியப் பலன்களை பெறும் நோக்கில், மத்திய அரசு, ஓய்வூதிய நிதியம் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பி.எப்.ஆர்.டீ.ஏ.,) என்ற அமைப்பை உருவாக்கியது.
இந்த அமைப்பின் கீழ், புதிய ஓய்வூதியத் திட்டம் (என்.பி.எஸ்.,) கடந்த 2004ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அவ்வாண்டு முதல், மத்திய அரசு பணியில் சேர்ந்தோர், புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டனர்.
எதிர்ப்பு:இத்திட்டத்திற்கு, பல்வேறு அரசு பணியாளர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந் நிலையிலும், கடந்த 2008ம் ஆண்டு நிலவரப்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்த மத்திய அரசு பணியாளர் எண்ணிக்கை, 4.30 லட்சமாக உயர்ந்தது. இதையடுத்து, இத் திட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பும் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்தது. கடந்த 2009ம் ஆண்டு, இத்திட்டத்தில், 24 மாநில அரசுகளும் இணைந்தன. இதையடுத்து, என்.பி.எஸ்.,-ன் சந்தாதாரர் எண்ணிக்கை, 7.80 லட்சமாகவும், பொதுத் துறை நிறுவனப் பணியாளர்களின் சேர்க்கைக்குப் பின்னர் 18.57 லட்சமாகவும் உயர்ந்தது.
குறைந்தபட்ச முதலீடு:இந்த ஓய்வூதிய திட்டத்தில் குறைந்தபட்சம் மாதம் ஒன்றுக்கு, 500 ரூபாய் அல்லது ஆண்டுக்கு 6,000 ரூபாய் என்ற அளவில் முதலீடு செய்யலாம். இத்திட்டங்களில் திரட்டப்படும் நிதி, பங்குகள், கடன் பத்திரங்கள் உள்ளிட்ட நிதியினங்களில், முதலீடு செய்யப்படுகின்றன. கடந்த மூன்று நிதியாண்டுகளில், இத்தகைய முதலீடுகள் வாயிலாக, இத்திட்டங்களின் வருவாய் வளர்ச்சி, இதர முதலீடுகளை விட சிறப்பாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக, வங்கி டெபாசிட், சிறுசேமிப்பு, பரஸ்பர நிதித் திட்டங்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம் உள்ளிட்டவற்றில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளில் கிடைத்த வருவாயை விட, என்.பி.எஸ்.,- திட்டங்கள் அதிக வருவாயை வழங்கியுள்ளன.இதனால், கடந்த சில ஆண்டுகளாக, இத்திட்டம் குறித்து பாராமுகமாக இருந்த தனியார் துறை நிறுவனங்களும், தற்போது, தங்களது ஊழியர்களை இத்திட்டத்தில் ஆர்வத்துடன் சேர்க்கத் தொடங்கியுள்ளன.
கடந்த எட்டு மாதங்களில் மட்டும், 240 தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள், என்.பி.எஸ்.,-ல் இணைந்துள்ளனர். இது தவிர, அமைப்பு சாரா தொழிலாளர்கள், தனி நபர்கள், சுய தொழில் புரிவோரும் இத்திட்டத்தில் இணைந்து வருகின்றனர்.அதற்கேற்ப, இத்திட்டத்தின் கீழ், நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பும், முதலீடுகளின் மீதான வருவாய் வளர்ச்சியும் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்து வருகிறது.
எண்ணிக்கை:சென்ற 2011-12ம் நிதியாண்டு நிலவரப்படி, என்.பி.எஸ்., சந்தாதாரர் எண்ணிக்கை 36.20 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில், 10 லட்சம், மத்திய அரசுப் பணியாளர்களும், 13.32 லட்சம், மாநில அரசு ஊழியர்களும், 11.83 லட்சம் அமைப்பு சாரா தொழிலாளர்களும், எஞ்சியோர் இதர பிரிவிலும் அடங்குவர்.
இத்திட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு, 77 சதவீதம் அதிகரித்து, 15,163 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில், மத்திய அரசுப் பணியாளர்களுக்கான திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டிற்கு 9.95 சதவீத வருவாயும், மாநில அரசு ஊழியர்களின் திட்டத்தில் செய்த முதலீட்டிற்கு 8.50 சதவீத வருவாயும் கிடைத்துள்ளன.
இந்த வருவாய், பொருளாதார வளர்ச்சி சிறப்பாக காணப்பட்ட 2010-11ம் நிதியாண்டில், முறையே 11.35 சதவீதம் மற்றும் 9.80 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அனுமதி:சென்ற நிதியாண்டில்,தனிநபர்கள்,அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான "என்.பி.எஸ் லைட்' என்ற திட்டம் 10.60 சதவீத வருவாயை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.என்.பி.எஸ்., திட்டத்தை எல்.ஐ.சி., யூ.டி.ஐ., உள்ளிட்ட ஆறு நிறுவனங்கள் நிர்வகித்து வருகின்றன. தற்போது, மேலும் பல நிறுவனங்களுக்கும் இத்திட்டத்தை நிர்வகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் நவம்பர் மாதம் முதல், இத்திட்டத்தின் கீழ் நிறுவனங்கள் வசூலிக்கும் பராமரிப்புக் கட்டணம் 0.25 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது. இதனால், இத்திட்டத்தை மேற்கொள்ளும் நிறுவனங்கள், ஆர்வத்துடன் அதிக அளவில் முதலீடுகளை திரட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|