பதிவு செய்த நாள்
11 செப்2012
00:39
புதுடில்லி:நடப்பு 2012-13ம் பருவத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 8 சதவீதம் குறையும் என, இந்திய சர்க்கரை உற்பத்தியாளர் கூட்டமைப்பு (இஸ்மா), மறு மதிப்பீடு செய்துள்ளது.
மகாராஷ்டிராநாட்டின் மொத்த சர்க்கரை உற்பத்தியில், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் பங்களிப்பு, 45 சதவீதம் என்ற அளவில் உள்ளது. பருவ மழை குறைந்துள்ளதால், இம்மாநிலங்களில், கரும்பு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, ஒட்டுமொத்த அளவில், நடப்பு பருவத்தில், சர்க்கரை உற்பத்தி, 2.40 கோடி டன்னாக குறையும் என,"இஸ்மா' மதிப்பிட்டுள்ளது. முந்தைய மதிப்பீட்டில், சர்க்கரை உற்பத்தி 2.50 கோடி டன்னாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. சென்ற 2011-12ம் பருவத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.60 கோடி டன்னாக இருந்தது.நடப்பு பருவத்தில், மகாராஷ்டிராவின் சர்க்கரை உற்பத்தி, 65 லட்சம் டன்னாக குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. முந்தைய பருவத்தில், இம்மாநிலத்தின் சர்க்கரை உற்பத்தி, 89.50 லட்சம் டன்னாக இருந்தது.
இதே பருவங்களில், கர்நாடகாவின் சர்க்கரை உற்பத்தியும் குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் போதிய அளவிற்கு மழை
பெய்யாததால் கரும்பு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சர்க்கரை உற்பத்தி 21 சதவீதம் சரிவடைந்து, 38 லட்சம் டன்னிலிருந்து, 30 லட்சம் டன்னாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தர பிரதேசம்:அதேசமயம், உத்தர பிரதேசத்தில், முந்தைய பருவத்தை விட, நடப்பு பருவத்தில், கரும்பு பயிரிடப்படும் பரப்பளவு, 10 சதவீதம் உயர்ந்து, 24.74 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. இதனால், இம்மாநிலத்தின் சர்க்கரை உற்பத்தி, 13.27 சதவீதம் உயர்ந்து, 69.74 லட்சம் டன்னிலிருந்து, 79 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.நடப்பு சர்க்கரை பருவத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.35 - 2.40 கோடி டன் என்ற அளவில் தான் இருக்கும் என, மத்திய உணவு அமைச்சகம் மதிப்பீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|