பதிவு செய்த நாள்
09 அக்2012
04:24
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் வாரத்தின் தொடக்க தினமான, திங்கட்கிழமையன்று மிகவும் மோசமாக இருந்தது. சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இல்லாததையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது. இந்நிலையில், லாப நோக்கம் கருதி, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததையடுத்து, கடந்த 10 நாட்களில் இல்லாத அளவாக, பங்கு வியாபாரம் சரிவைக் கண்டது.உலக வங்கி, கிழக்கு ஆசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை குறைத்து மதிப்பீடு செய்துள்ளது.
மேலும், கடன் நெருக்கடி குறித்து, ஐரோப்பிய நாடுகளின் நிதி அமைச்சகர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது போன்றவற்றால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில், வர்த்தகம் மந்தமாக காணப்பட்டது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், எண்ணெய், எரிவாயு, பொறியியல் பொருட்கள், நுகர்வோர் சாதனங்கள் உள்ளிட்ட, பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து போனது.
இருப்பினும், ஆரோக்யபராமரிப்பு துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 229.48 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 18,708.98 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 18,969.19 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,684.40 புள்ளிகள் வரையிலும் சென்றது.'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ரிலையன்ஸ்,ஹிண்டால்கோ, பீ.எச்.இ.எல்., எல் அண்டு டி உள்ளிட்ட 22 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், சன்பார்மா, பார்தி ஏர்டெல், சிப்லா, ஜிந்தால் ஸ்டீல், ஐ.டி.சி., உள்ளிட்ட 8 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் காணப்பட்டன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 70.95 புள்ளிகள் குறைந்து, 5,676 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,751.85 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,666.20 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|