பதிவு செய்த நாள்
10 அக்2012
01:00
இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து, உடைந்த மற்றும் சிறு துண்டுகளான, முந்திரி வகைகளை குறைந்த விலையில் இறக்குமதி செய்து கொள்கின்றன. இதனால், உள்நாட்டில் முந்திரி பதப்படுத்தும் தொழில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இவ்வாறு உடைக்கப்பட்ட முந்திரி வகைகளின் மதிப்பை குறைத்துக் காட்டி இறக்குமதி செய்வதால், மத்திய அரசுக்கும் வரி வருவாயில் இழப்பு ஏற்படுவதாக, இந்திய முந்திரி ஏற்றுமதி மேம்பாட்டு குழு (சி.இ.பி.சி.ஐ.,) தெரிவித்துள்ளது.
வியட்னாம்:சென்ற, 2011ம் ஆண்டு ஏப்ரல் முதல், நடப்பு, 2012ம் ஆண்டு பிப்ரவரி வரை, வியட்னாம் மற்றும் பிரேசில் நாடுகளில் இருந்து, மதிப்பை குறைத்துக் காட்டி, 2,000 டன் முந்திரி வகைகள் (உடைந்த மற்றும் சிறுதுண்டுகளான), இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இவற்றில், நவிமும்பையில் உள்ள, நவ சேவா துறைமுகம் வாயிலாக, 10.24 கோடி ரூபாய் மதிப்பிலான, 818 டன் முந்திரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இவை, ஒரு கிலோ 125.32 ரூபாய் என்ற சராசரி மதிப்பில், இறக்குமதியாகி உள்ளன.ஆனால், தரம் மற்றும் வகைகளின் அடிப்படையில், இவற்றின் அசல் விலை, 200 ரூபாயில் இருந்து, 500 ரூபாயாக உள்ளது என, சி.இ.பி.சி.ஐ., அமைப்பை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மதிப்பு:இது குறித்து சி.இ.பி.சி.ஐ., செயல் இயக்குனரும், செயலருமான சசி வர்மா கூறிய தாவது: சென்ற நிதியாண்டில், மிக அதிக அளவில், உடைந்த மற்றும் சிறு துண்டுகளான முந்திரி வகைகள், மதிப்பை குறைத்து காட்டி இறக்குமதி செய்யப்பட்டு உள்ளன. இவற்றின் போட்டியை சமாளிக்க முடியாமல், உள்நாட்டில், முந்திரி பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளோர், கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
முந்திரி வகைகளுக்கு, 36.9 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. சென்னை மற்றும் மும்பை துறைமுகங்கள் வழியாகவும் அதிக அளவில், இது போன்ற முந்திரி வகைகள், மதிப்பை குறைத்து காட்டி, இறக்குமதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இது குறித்து மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சுங்கத் துறை மற்றும் அன்னிய வர்த்தக தலைமை இயக்குனரகம், கண்காணிப்பை தீவிரப்படுத்தி, ஒன்று அல்லது இரண்டு துறைமுகங்கள் வழியாக மட்டுமே, முந்திரி இறக்குமதிக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
தூத்துக்குடி:இதன்படி, தூத்துக்குடி மற்றும் கொச்சி துறைமுகங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்க வேண்டும் என, பரிந்துரைத்துள்ளோம். ஏனெனில், பல துறைமுகங்களில் உள்ள சுங்கத் துறை அதிகாரிகளுக்கு, முந்திரி வகைகளை இனம் காண தெரியவில்லை என, சசி வர்மா மேலும் கூறினார்.வியட்னாமில், உடைந்த மற்றும் சிறு துண்டுகளான முந்திரி வகைகள் பயன்பாடு அதிக அளவிற்கு இல்லை. இந்நாடு, அமெரிக்காவிற்கு அதிக அளவில் முழு முந்திரியை ஏற்றுமதி செய்துவருகிறது.
ஆனால், உடைந்த மற்றும் சிறு துண்டுகளான முந்திரி வகைகளை, அமெரிக்கா இறக்குமதி செய்வதில்லை. இதனால், மிகப் பெரும் சந்தையை கொண்ட இந்தியாவிற்கு, இவ்வகை முந்திரியை, வியட்னாம், அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருகிறது.இது, உள்நாட்டு முந்திரி பதப்படுத்தும் தொழிலை பாதிப்பதாக உள்ளது. குறிப்பாக, இத்தொழிலில் ஈடுபட்டுள்ள, கிராமப் புறங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பெண்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.கால்நடை தீவனம் என்ற பெயரிலும், உடைந்த முந்திரி வகைகள் இறக்குமதி செய்யப்படுவதாக, சசி வர்மாதெரிவித்தார்.
உற்பத்தி:இந்தியாவில், ஆண்டுக்கு, 6.50 லட்சம் டன் முந்திரிக்கொட்டை உற்பத்தியாகிறது. இது தவிர, இறக்குமதி செய்யப்படும் 7 லட்சம் டன் முந்திரிக் கொட்டையில் இருந்து, முந்திரி பருப்பு பிரித்தெடுக்கப்படுகிறது.சென்ற, 2011-12ம் நிதியாண்டில், இந்தியாவில் இருந்து, 4,400 கோடி ரூபாய் மதிப்பிலான, 1.30 லட்சம் டன் முந்திரி வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இதே காலத்தில், உள்நாட்டில், 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான, 1.50 லட்சம் டன் முந்திரி பயன்படுத்தப்பட்டுள்ளது.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|