பதிவு செய்த நாள்
11 நவ2012
02:34
மும்பை: சென்ற அக்டோபர் மாதத்தில், இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்களால் நிர்வகிக்கும், சொத்து மதிப்பு, 7.68 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய செப்டம்பர் மாதத்தில் நிர்வகிக்கப்பட்ட சொத்து மதிப்பை (7.20 லட்சம் கோடி ரூபாய்) விட, 6.68 சதவீதம் அதிகமாகும்.கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவிற்கு, பரஸ்பர நிதி நிறுவனங்களால் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, சென்ற அக்டோபரில் அதிகரித்துள்ளது.உள்நாட்டில், பங்கு வர்த்தகம் நன்கு இல்லாததால், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடு குறைந்து வருகிறது. இதனால், சென்ற அக்டோபர் மாதத்தில், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில், பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 2 சதவீதம் குறைந்து, 1.59 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் குறைந்துள்ளது.அதேசமயம், கடன் சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்கள் வாயிலாக நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு, சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது. சென்ற அக்டோபர் மாதத்தில் மட்டும், கடன் சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில், நிர்வகிக்கப்பட்ட சொத்து மதிப்பு, 22.4 சதவீதம்
அதிகரித்துள்ளது.சென்ற அக்டோபர் மாதம் பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பில்,"கில்ட் பண்டு' திட்டத்தின் கீழ், வருவாய் மற்றும் நிதி சந்தை சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு, முந்தைய செப்டம்பர் மாதத்தை விட, 31 சதவீதம் வளர்ச்சிகண்டு, 1,037 கோடி ரூபாய் அதிகரித்து உள்ளது. இதையடுத்து, இதுவரையிலுமாக, "கில்ட் பண்டு' திட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு, 2 சதவீதம் உயர்ந்து, 48,135 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.அதேசமயம், சென்ற அக்டோபர் மாதத்தில்,"ஈ.டி.எப்.,' திட்டங்களின் சொத்து மதிப்பு, 5 சதவீதம் குறைந்து, 1,715 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. "கோல்டு ஈ.டி.எப்.,' சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு, செப்டம்பர் மாதத்தை விட, 2.5 சதவீதம் வளர்ச்சிகண்டு, 11,477 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|