பதிவு செய்த நாள்
29 நவ2012
00:07
புதுடில்லி:இந்திய பாசுமதி அரிசியில் தயாரிக்கப்படும் பிரியாணி, புலவு உள்ளிட்ட சுவையான உணவு வகைகளை, ஆப்ரிக்க மக்கள் விரும்பி உண்ணத் துவங்கிஉள்ளனர்.இதனால், இந்திய பாசுமதி அரிசியின் ஒட்டுமொத்த ஏற்றுமதி, நடப்பு 2012-13ம் நிதியாண்டின், சென்ற அக்டோபர் வரையிலான ஏழு மாதங்களில் 26 சதவீதம் உயர்ந்து, 19.20 லட்சம் டன்னாக (10,453 கோடி ரூபாய்) அதிகரித்து உள்ளது.
ஏற்றுமதி:கடந்த 2011-12ம் நிதியாண்டின் இதே காலத்தில், 16.40 லட்சம் டன் (8,265 கோடி ரூபாய்) பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.சென்ற முழு நிதியாண்டில், 15,450 கோடி ரூபாய் மதிப்பிலான 32.10 லட்சம் டன் பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது.இந்தியாவில், காஷ்மீர், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், அரியானா, டில்லி ஆகிய மாநிலங்களில், அதிகளவில் பாசுமதி அரிசி உற்பத்தியாகிறது.மத்திய அரசு, பாசுமதி அரிசி ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், அதன் மீதான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை நீக்கியுள்ளது.இந்தியாவின் மொத்த பாசுமதி அரிசி ஏற்றுமதியில், 50 சதவீத பங்களிப்பை ஈரான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் கொண்டுள்ளன.
அமெரிக்கா:வளைகுடா நாடுகளுடன், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்திய பாசுமதி அரிசி ஏற்றுமதியாகிறது.இந்நாடுகளில் இந்திய பாசுமதி அரிசிக்கு தேவை அதிகரித்துள்ளது. சென்ற நிதியாண்டில், அமெரிக்காவிற்கு மட்டும், 900 கோடி ரூபாய் மதிப்பிற்கு, 1.24 லட்சம் டன் பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன், இந்திய பாசுமதி அரிசியில், பூச்சிக் கொல்லி ரசாயனங்கள் உள்ளதாக கூறி, அவற்றை இறக்குமதி செய்ய அமெரிக்கா மறுத்து விட்டது.
கடந்த 2010ம் ஆண்டு கூட, இந்திய பாசுமதி அரிசி ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டது. ஹம்பர்க்கை சேர்ந்த ஆய்வு நிறுவனமொன்று, இந்திய பாசுமதி அரிசியில் "கார்பண்டசீம்' மற்றும் "ஐசோப்ரோதியோலேன்' என்ற ரசாயனங்கள், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, 0.03 சதவீதம் அதிகம் இருப்பதாக தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, 20,000 டன் பாசுமதி அரிசி ஏற்றுமதி பாதிக்கப்பட்டது.இது போன்ற பாதிப்புகளை தவிர்க்க, ஆப்ரிக்கா, தூர கிழக்கு நாடு கள் போன்றவற்றுக்கு பாசுமதி அரிசியை சந்தைப்படுத்துவதில், ஏற்றுமதியாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தேவை: இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. குறிப்பாக, ஆப்ரிக்காவிற்கான பாசுமதி அரசி ஏற்றுமதி அதிகரித் துள்ளது. அதே சமயம், மேற்கு ஆசிய சந்தைகளிலும், இந்திய பாசுமதி அரிசிக்கு வரவேற்பு பெருகிஉள்ளது. பாரம் பரிய சந்தைகளுடன், புதிய சந்தைகளிலும், இந்திய பாசுமதி அரிசிக்கான தேவை அதிகரித்துள்ளதால், அதன் ஏற்று மதி, ஒட்டுமொத்த அளவில் உயர்ந்துள்ளது என, ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.அதே சமயம், உள்நாட்டில் பாசுமதி நெல் விலை, கடந்த ஆண்டை விட, நடப்பாண்டில் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.
பரப்பளவு:பாசுமதி நெல் பயிரிடும் பரப்பளவு குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதால், அதன் உற்பத்தி குறை யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால், அதன் விலை உயர்ந்துள்ளது.சென்ற ஆண்டு,பஞ்சாப்,அரியானா மாநிலங்களில், ஒரு குவிண்டால் பாசுமதி நெல் விலை, 1,500-1,700 ரூபாய் வரை இருந்தது. இது, நடப்பாண்டு, 2,700-3,100 ரூபாயாக அதிகரித்து உள்ளது.அது போன்று, சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு, ஒரு டன் பாசுமதி அரிசி விலை, 800 - 900 டாலர் என்றளவில் இருந்தது. இது, நடப்பாண்டில், 1,000 - 1,500 டாலராக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|