பதிவு செய்த நாள்
05 டிச2012
00:05
புதுடில்லி:அலைபேசியில், "ரோமிங்' கட்டணத்தை ரத்து செய்ய தொலைத்தொடர்பு துறை திட்டமிட்டுள்ளது. இதை அமல்படுத்துவதற்கான பணிகளை, மூன்று மாதங்களில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, வரும் 2013ம் ஆண்டு, மார்ச் முதல், "ரோமிங்' கட்டணம் ரத்தாகும் என, எதிர்பார்க்கப் படுகிறது.
இலவச அழைப்பு:இது, அமலுக்கு வரும்பட்சத்தில், ஒருவர், நாட்டின் எந்த பகுதிக்கு சென்றாலும், அவரது அலைபேசியில் வரும் அழைப்புக்கு கட்டணம் கிடையாது. அதே சமயம், அவர் வெளியூர் சென்று, அங்கிருந்து மற்றொருவருடன் அலைபேசியில் தொடர்பு கொண்டால், அது உள்ளூர் அழைப்பாகவே கருதப்பட்டு, அதற்கான கட்டணம் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.
இத்திட்டம், அடிக்கடி வெளியூர் பயணம் மேற்கொள்வோருக்கு குறிப்பிடத்தக்க அளவிற்கு அலைபேசி கட்டணச் செலவை மிச்சப்படுத்தும்.இத்துடன், எண்ணை மாற்றாமல், அலைபேசி சேவை நிறுவனங்களை மாற்றிக் கொள்ளும் திட்டம்(எம்.என்.பி.,) தொடர்பான கட்டுப்பாடுகளும் நீக்கப்பட உள்ளன.
தற்போது, ஒருவர், தமது அலைபேசி எண்ணை மாற்றாமல், வேறொரு அலைபேசி சேவை நிறுவனத்திற்கு மாறும் வசதி உள்ளது.ஆனால், இத்திட்டத்தின் கீழ், ஒரே வட்டத்திற்குள் உள்ள வேறொரு நிறுவனத்தின் அலைபேசி சேவைக்கு மட்டுமே மாற முடியும். வேறொரு வட்டத்தில் உள்ள அலைபேசி சேவை நிறுவனத்திற்கு மாற முடியாது.
உதாரணமாக, சென்னையை சேர்ந்த ஒருவர் ஐதராபாத்தில் குடியேறி, எம்.என்.பி., திட்டத்தின் கீழ் ஒரே எண்ணில் வேறொரு நிறுவனத்தின் அலைபேசி சேவையை பெற முடியாது.இந்த கட்டுப்பாட்டை நீக்கவும் தொலைத்தொடர்பு துறை திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் அமலுக்கு வரும்போது, நாட்டின் எந்த பகுதிக்கு மாறினாலும், ஒரே அலைபேசி எண்ணில், அப்பகுதியில் உள்ள வேறொரு அலைபேசி நிறுவனத்தின் சேவையை பெறலாம்.
கொள்கை:மேற்கண்ட இரு திட்டங்களை உள்ளடக்கிய ஏழு அம்ச கொள்கையை தொலைத்தொடர்பு துறை உருவாக்கி வருகிறது. இத்திட்டங்களை அமல்படுத்துவதற்கு முன்பாக, தேசிய அலைபேசி சேவை உரிமம் குறித்து முடிவு எடுக்க வேண்டி உள்ளது. மேலும், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிகாட்டுதல்களையும் கருத்தில் கொள்ளப் படும் என, இத்துறை சார்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|