பதிவு செய்த நாள்
05 டிச2012
00:07
கோல்கட்டா:தங்கம் விலை உயர்ந்து வருவதை அடுத்து, பழைய தங்க நகைகளுக்கு மவுசு கூடியுள்ளது.பல ஆண்டுகளுக்கு முன் குறைந்த விலையில் வாங்கிய தங்க நகைகளை, தற்போதைய விலையை விட, சற்று குறைந்த விலைக்கு விற்பனை செய்து லாபம் பார்ப்பது அதிகரித்து வருகிறது.இதனால், பழைய தங்க நகைகளை வாங்கும் சந்தை விறுவிறுப்பாக உள்ளது.
கிராமங்கள்:குறிப்பாக, கிராமப்புற மக்கள், தங்களிடம் உள்ள பழைய தங்க நகைகளை அதிக அளவில் விற்பனை செய்து, வேளாண் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.அது போன்று, தங்க நகைகளை அடகு வைத்து, பல மாதங்கள் வட்டி கட்ட முடியாமல் தவிப்பவர்களும், தற்போதைய நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.கடன் வாங்கியாவது, அடமானம் வைத்த தங்க நகைகளை மீட்டு, அவற்றை முன்பு வாங்கியதை விட பல மடங்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும், திருமண வீட்டார், 10 சவரன், 20 சவரன் என்று மொத்தமாக தங்க ஆபரணங்களை வாங்கும் போது, தங்களிடம் உள்ள பழைய தங்கத்தை கொடுத்து, புதிய ஆபரணங்களாக மாற்றி கொள்கின்றனர்.புதிய நகைக்கும், பழைய நகைக்கும் உள்ள வித்தியாச தொகையை மட்டும் செலுத்துவதன் மூலம், அவர்கள் கணிசமான தொகையை சேமிக்கின்றனர்.
சுங்க வரி:இதுபோன்ற காரணங்களால், பழைய தங்கச் சந்தைக்கு மவுசு கூடிக்கொண்டு வருகிறது.நடப்பாண்டின், முதல் ஒன்பது மாத காலத்தில், பழைய தங்கச் சந்தையில், 89 டன் தங்கம் விற்பனையாகியுள்ளது. இது, சென்ற ஆண்டின், இதே காலத்தில், 36 டன்னாக இருந்தது என, தனியார் ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
சுங்க வரி உயர்வு மட்டுமின்றி, பழைய தங்க நகைகளை கொடுத்து, புதிய ஆபரணங்களை வாங்குவதாலும், நாட்டின் தங்கம் இறக்குமதி குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், இந்தியாவின் தங்கம் இறக்குமதி, நடப்பாண்டில், 750 டன்னுக்குள் இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.நடப்பாண்டின், ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான, 10 மாத காலத்தில், நாட்டின் தங்கம் இறக்குமதி, 575 டன் என்ற அளவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உலக தங்க கவுன்சில்நடப்பாண்டில், சென்ற செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில், தங்கத்திற்கான தேவை, 223.10 டன் என்ற அளவில் அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலாண்டை (204.80 டன்) விட, 9 சதவீதம் அதிகம் என, உலக தங்க கவுன்சில் தெரிவித்து உள்ளது.தங்க பயன்பாட்டில்,முன்னணி நாடுகளுள் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. நடப்பாண்டின், முதல் ஆறு மாத காலத்தில், இந்தியாவில் தங்கத்திற்கான தேவை குறைந்திருந்தது.
பண்டிகை காலம்:இந்தியாவில், பண்டிகை காலம் மற்றும் திருமண சீசன் போன்ற காரணங்களால், இரண்டாவது ஆறு மாத காலத்தில், இதன் தேவை படிப்படியாக அதிகரித்துள்ளது. இதனால், தங்கம் விற்பனையும் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.சென்ற செப்டம்பருடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில், சர்வதேச அளவில், தங்கத்திற்கான தேவை, 1,084 டன்னாக குறைந்துள்ளது. இது, சென்ற ஆண்டின், இதே காலாண்டை (1,223 டன்) விட, 11 சதவீதம் குறைவாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|