பதிவு செய்த நாள்
22 டிச2012
00:40
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்று மிகவும் மோசமாக இருந்தது. சர்வதேச அளவில், பங்கு வியாபாரம் சுணக்கம் கண்டதையடுத்து, பீ.எஸ்.இ., "சென்செக்ஸ்', ஒரு சதவீதத்திற்கும் அதிகமான சரிவுடன் முடிவடைந்தது.
அமெரிக்க நிதிப்பற்றாக்குறைக்கான தீர்வு எட்டப்படாததால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தை களிலும் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. நேற்றைய வர்த்தகத்தில், ரியல் எஸ்டேட், உலோகம், ஆரோக்ய பராமரிப்பு, பொறியியல் உள்ளிட்ட அனைத்து துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளும் குறைந்த விலைக்கு கைமாறின.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 211.92 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 19,242 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,394.55 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 19,221.12 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், டி.சி.எஸ் மற்றும் ஐ.டி.சி., ஆகிய இரண்டு நிறுவன பங்குகளை தவிர, ஏனைய, 28 நிறுவனப் பங்குகளின் விலையும் சரிவுஅடைந்து காணப்பட்டது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 68.70 புள்ளிகள் சரிவடைந்து, 5,847.70 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 5888 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,841.65 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|