பதிவு செய்த நாள்
03 ஜன2013
10:25
சென்னை: சுற்றுலாத்தலங்களுக்கான சாலைகளை மேம்படுத்த, 10 கோடி ரூபாய் உட்பட, 27 கோடி ரூபாய் மதிப்பில், சுற்றுலாத்தலங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் செய்திக் குறிப்பு: அரியலூர், கோவை, திண்டுக்கல், சேலம், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தலங்கள், திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் கோவில், சிறுவாபுரி முருகன் கோவில், தேனி மாவட்டம் கும்பக்கரை அருவி உள்ளிட்ட பகுதிகளில், கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகிறது. இதற்காக, 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில், பயணிகள் தங்குமிடம், குடிநீர், உணவுக் கூடம், பொருள் வைப்பறை, கழிவறை, அணுகு சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் உள்ள ஜேடார் பாளையம் அண்ணா பூங்காவில், படகு குழாம், ரயில் பூங்கா, குளியல் அறைகள், விளையாட்டு உபகரணங்கள் வாங்குதல் உள்ளிட்ட பணிகளுக்காக, 5 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் தரப்பட்டிருக்கிறது. திருச்சி, ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றங் கரையில், முக்கொம்பு சுற்றுலாத் தலத்தில், பல்வேறு வசதிகளை மேற்கொள்ள, 3 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்தலங்களுக்கு செல்லும் இணைப்புச் சாலைகளை, நெடுஞ்சாலைத்துறை மூலம் மேம்படுத்த, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், சிவகங்கை, நாகை, விருதுநகர், திண்டுக்கல்,புதுக்கோட்டை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு, செல்லும் சாலைகள் மேம்படுத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|