பதிவு செய்த நாள்
07 ஜன2013
01:26
புதுடில்லி:வரும் 2020ம் ஆண்டிற்குள், நாட்டில் உள்ள துறைமுகங்களை மேம்படுத்தும் வகையில், மத்திய அரசு, 2.87 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்த உள்ளது. இதையடுத்து, இந்திய துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறன், கூடுதலாக, 320 கோடி டன் அதிகரிக்கும்.மேற்கண்ட மொத்த முதலீட்டில், கிழக்கு கடற்கரை பகுதி துறைமுகங்கள், 1,12,600 கோடி ரூபாயை ஈர்க்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:இதையடுத்து, இப்பகுதியில் அமைந்துள்ள துறைமுகங்கள் கையாளும் சரக்குகளின் அளவு, கூடுதலாக, 90 கோடி டன் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.மேற்கண்ட மொத்த முதலீட்டில், கிழக்கு கடலோரத்தில் உள்ள சிறிய துறைமுகங்களில், 57 சதவீத அளவிற்கு முதலீடு மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், 46 சதவீதம், துறைமுகங்கள் சரக்கு கையாளும் திறனை அதிகப்படுத்திக் கொள்ள செலவிடப்பட உள்ளது.
குறிப்பாக, கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள, தாம்ரா, கோபால்பூர், கங்காவரம், காக்கிநாடா, மச்சிலிபட்டினம், கிருஷ்ணாபட்டினம், காட்டுப்பள்ளி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட வளர்ந்து வரும் துறைமுகங்களில் அதிகளவில் முதலீடு மேற்கொள்ளப்பட உள்ளது. கிழக்கு கடற்கரை பகுதி, மேற்கு வங்கம் துவங்கி தமிழகம் வரையிலுமாக, 2,630 கி.மீ., நீளத்திற்கு பரந்து விரிந்துள்ளது. இதில், பெரிய மற்றும் சிறிய அளவிலான, 50 துறைமுகங்கள் செயல்பட்டு வருகின்றன.
குறிப்பாக, தூத்துக்குடி, சென்னை, எண்ணூர், விசாகப்பட்டினம், பரதீப், ஹால்டியா மற்றும் கோல்கட்டா ஆகிய முக்கிய ஏழு துறைமுகங்களும், பல்வேறு சிறிய துறைமுகங்களும் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ளன.
வளர்ச்சி:சர்வதேச வர்த்தகத்தில், சரக்குகளை கையாள்வதில், மேற்கண்ட துறைமுகங்களின் பங்களிப்பு, சென்ற 2010ம் ஆண்டில், 23 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இது, வரும் 2014ம் ஆண்டில், 34 சதவீதமாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சென்ற 2011-12ம் நிதியாண்டில், இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகம், 79,400 கோடி டாலராக வளர்ச்சி கண்டுள்ளது. இதில், கடல் வழியாக மேற்கொள்ளப்பட்ட வர்த்தகத்தின் பங்களிப்பு, அளவின் அடிப்படையில், 75 சதவீதமாகவும், மதிப்பின் அடிப்படையில், 75 சதவீதம் என்ற அளவிலும் உள்ளது.
எண்ணூர் :அடுத்த ஐந்து ஆண்டுகளில், கிழக்கு கடற்கரை பகுதி முக்கிய துறைமுகங்கள் கையாளும் சரக்கின் அளவு, சராசரியாக 15 சதவீதம் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதில், மிக அதிகளவில், கோல்கட்டா மற்றும் எண்ணூர் துறைமுகங்கள் முறையே, 37 சதவீதம் மற்றும் 23 சதவீதம் வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, கோல்கட்டா துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன், ஆண்டுக்கு சராசரியாக, 39 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.7 கோடி டன் (சென்ற 2011-12ம் நிதியாண்டு) என்ற அளவிலிருந்து, 8.9 கோடி டன்னாக (வரும் 2016-17ம் நிதியாண்டு) அதிகரிக்கும் என, கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும், பரதீப் (15.70 கோடி டன்) மற்றும் விசாகப்பட்டினம் (14 கோடி டன்) ஆகிய துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறனும் மிகவும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதே போன்று, கிழக்கு கடற்கரை பகுதி துறைமுகங்களில், அயல்நாடுகளில் இருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதியும், 25 சதவீதம் உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இதில், சீனா (39 சதவீதம்), கொரியா (9 சதவீதம்), ஹாங்காக் (8 சதவீதம்) மற்றும் இந்தோனேஷியா (8 சதவீதம்) ஆகிய நாடுகள் முக்கிய பங்கு வகிக்கும் என, கணக்கிடப்பட்டு உள்ளது.
சரக்கு பெட்டகங்கள்:கடந்த 2009ம் ஆண்டில், கிழக்கு கடற்கரை துறைமுகங்கள், 20 லட்சம் சரக்கு பெட்டகங்களை கையாண்டுள்ளன. இது, இந்தியா கையாளும் ஒட்டு மொத்த சரக்கு பெட்டக அளவில், 20 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.வரும் 2020ம் ஆண்டிற்குள், கிழக்கு கடற்கரை துறைமுகங்கள் கையாளும், சரக்கு பெட்டகங்களின் எண்ணிக்கை, 1.08 கோடியாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|