பதிவு செய்த நாள்
13 ஜன2013
00:17
புதுடில்லி:இந்தியாவில், பாமாயில் விலை மேலும் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில், பாமாயில் உற்பத்தியில், இந்தோனேஷியா முன்னிலையில் உள்ளது. இந்நாடு, மலேசியாவின் போட்டியை எதிர்கொள்ளும் வகையில், பாமாயில் மீதான வரியை குறைக்க முடிவு செய்துள்ளது.
உற்பத்தி அதிகரிப்பு:இதன் காரணமாகவே, இந்தியாவில் பாமாயில் விலை குறைய வாய்ப்புள்ளதாக, இந்திய எண்ணெய் உற்பத்தியாளர் சங்கத்தின் செயல் இயக்குனர் பீ.வி.மேத்தா தெரிவித்து உள்ளார்.மலேசியாவில், இவ்வாண்டு, பாமாயில் உற்பத்தி அதிகரித்து உள்ளதுடன், கையிருப்பும் அதிகமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு, மலேசிய அரசு, பாமாயில் ஏற்றுமதி மீதான வரியை படிப்படியாக குறைத்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தில், மலேசிய அரசு, பாமாயில் மீதான ஏற்றுமதி வரியை, 23 சதவீதத்திலிருந்து, 8.5 சதவீதமாகவும், பின் இதை, 4.5 சதவீதமாகவும் குறைத்தது. இம்மாதத்தில், ஏற்றுமதிக்கான பாமாயில், வரி இல்லாத நிலையில், அதாவது, ஒரு டன் ஏற்றுமதிக்கான பாமாயில், 745 டாலர் என்ற விலையில் உள்ளது.
இச்சூழ்நிலையில், இந்தோனேஷியாவும், மலேசியாவின் போட்டியை எதிர்கொள்ளும் வகையில், பாமாயில் மீதான ஏற்றுமதி வரியை படிப்படியாக குறைத்துள்ளது. இந்நாடும், வரி இல்லாத அளவிற்கு பாமாயிலை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக, தெரிய வந்துள்ளது.
பங்களிப்பு:சர்வதேச அளவில், பாமாயில் ஏற்றுமதியில், மேற்கண்ட இரண்டு நாடுகளின் பங்களிப்பு, 87 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இந்தோனேஷியாவும், மலேசியாவும் பாமாயில் மீதான வரியை, போட்டி போட்டுக் கொண்டு குறைத்து வருகின்றன.இது, இந்நாடுகளில் இருந்து அதிக அளவில், கச்சா பாமாயிலை இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு மிகவும் சாதகமாக உள்ளது. இதனால், உள்நாட்டில் பாமாயில் விலை மிகவும் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|