பதிவு செய்த நாள்
15 ஜன2013
23:45
- நமது சிறப்பு நிருபர் -
வணிக வரித் துறையில், போதிய அளவு ஆட்கள் இல்லாதது, முழுமையாக கம்ப்யூட்டர் மயம் செய்யாதது போன்ற காரணங்களால், பல ஆயிரம் கோடி ரூபாய், வரி வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.இதனால், 2012 - 13ம் நிதியாண்டு இலக்கான, 53 ஆயிரம் கோடி ரூபாயில், இதுவரை, 36 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே, வணிக வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.
வரி இலக்கு
வணிக வரித் துறையில், 2011 - 12ம் நிதியாண்டில், 43 ஆயிரம் கோடி ரூபாய் வரி வசூலிக்க, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், 39 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே வசூலானது.2012 - 13ம் நிதியாண்டில் வணிக வரியாக, 53 ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்க, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ஆனால், கடந்த நவம்பர் வரை, 36 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே வசூலாகியுள்ளது. நடப்பு நிதியாண்டு முடிவதற்கு இன்னும், இரண்டரை மாதங்களே உள்ள நிலையில், வரி வசூல் இலக்கை எட்டுவது கடினம் என, வணிக வரித்துறை உயரதிகாரிகள் கூறுகின்றனர்.
உதவியாளர்கள்
இதுகுறித்து, வணிக வரி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழக அரசுக்கு வரி வசூல் செய்து கொடுப்பதில், வணிக வரித்துறை முதலிடத்தில் உள்ளது. ஆனாலும், இந்த துறையில், மொத்தமுள்ள, 10 ஆயிரத்து 500 பணியிடங்களில், 4,500 பணியிடங்கள், நீண்ட காலமாக காலியாகவே உள்ளன.குறிப்பாக, 10 இணை ஆணையர், 68 துணை ஆணையர், 170 உதவி ஆணையர், 182 வணிக வரி அலுவலர், 121 துணை வணிக வரி அலுவலர், 370 இளநிலை உதவியாளர்கள், 1,200 உதவியாளர்கள் உட்பட மொத்தம், 4,500 பணியிடங்கள் காலியாக உள்ளன.வரி ஏய்ப்பு, முறையான வாகன தணிக்கை, வரி நிலுவைகளை வசூல் செய்வது, திடீர் ஆய்வு மேற்கொள்வது போன்ற, முக்கிய பணிகளை செய்யக் கூட, ஆட்கள் இல்லை.இதனால், ஆண்டுதோறும் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய், வரி இழப்பு ஏற்படுகிறது.
உதாரணமாக, போலி பில்கள் தயாரித்து பல வணிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதால், ஆண்டு தோறும், 2,400 கோடி ரூபாய் அளவுக்கு, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.தமிழகம் முழுவதும், வணிக வரித்துறையில், 20 மேல் முறையீட்டு துணை ஆணையர்கள் இருக்க வேண்டும். ஆனால், தற்போது, மூன்று ஆணையர்கள் மட்டுமே உள்ளனர். 17 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், 5,000 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு தொடர்பான மனுக்கள், விசாரணை நடத்தப்படாமல் தொடர்ந்து நிலுவையிலேயே உள்ளன.
வரி வசூல் :இதுகுறித்து, தமிழ்நாடு வணிக வரி பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் தமிழ்ச்செல்வி கூறியதாவது:ஒவ்வொரு ஆண்டும் நிர்ணயம் செய்யப்பட்ட அளவுக்கு வரி வசூல் செய்ய முடிவது இல்லை.
காலிப் பணியிடங்கள் மற்றும் வணிக வரித்துறை, கம்ப்யூட்டர் மயமாக்கப்படாமல் இருப்பதே முக்கிய காரணம். இப்பிரச்னைக்கு தீர்வு காணும்போது, ஆண்டுதோறும், 60 முதல், 65 ஆயிரம் கோடி ரூபாய் வரை, வணிக வரி வசூல் செய்ய முடியும். தற்போதைய வரி வருவாய் இழப்புகளையும் முற்றிலுமாக தடுக்க முடியும்.இவ்வாறு தமிழ்ச்செல்வி கூறினார்.
இறக்குமதி பொருட்களால் பாதிப்பு
வெளிநாடுகளில் இருந்து, சென்னை துறைமுகம் மற்றும் விமான நிலையத்துக்கு, ஏராளமான பொருட்கள், தினமும் டன் கணக்கில் இறக்குமதியாகின்றன.குறிப்பாக, சீனாவில் இருந்து மொபைல் போன்கள், டி.வி.டி., பிளேயர்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள், அதிகளவில் இறக்குமதியாகின்றன. இவை, சென்னையில் இறக்குமதி செய்யப்படுவதற்கு மட்டுமே, வரி செலுத்தப்படுகின்றன.
இதையடுத்து, தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு, விற்பனைக்காக கொண்டு செல்ல, வரி செலுத்த வேண்டும். ஆனால், வரி செலுத்தப்படாமலேயே, இறக்குமதி பொருட்கள், திருட்டுத்தனமாக தமிழகத்தின் பல பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.இதை கண்காணித்து தடுக்க, வணிக வரித் துறையில், போதிய அளவில் அதிகாரிகள் இல்லை. இதனால் மாதந்தோறும், 100 கோடி ரூபாய் என்ற அளவில், ஆண்டுதோறும், 1,200 கோடி ரூபாய், வரி இழப்பு ஏற்படுகிறது என, வணிக வரித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|