பதிவு செய்த நாள்
20 ஜன2013
12:07
சென்னை: ஆவின் பால் பண்ணைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணி, ஒரு மாத இடைவெளிக்கு பின், மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதத்திற்குள் இப்பணி முடிந்த பின், சென்னையில் கூடுதலாக 2 லட்சம் லிட்டர் பால் வினியோகிக்க வாய்ப்பு ஏற்படும்.
மத்திய சென்னைக்கு அம்பத்தூர் பால் பண்ணையில் இருந்து 3.45 லட்சம் லிட்டர், வட சென்னைக்கு மாதவரம் பால் பண்ணையில் இருந்து 3.25 லட்சம் லிட்டர், தென்சென்னைக்கு சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் இருந்து, 4.05 லட்சம் லிட்டர் மற்றும் விழுப்புரம் ஒன்றியத்தில் இருந்து, 22 ஆயிரம் லிட்டர் என, மொத்தம் 11 லட்சம் லிட்டர் பால் வினியோகம் செய்யப்படுகிறது.
10 கோடி ரூபாய் : பால் வினியோகத்தை 13 லட்சம் லிட்டராக ஆவின் முடிவு செய்தது. இதற்காக தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ்,தேசிய புரதச்சத்து வழங்கும் அமைப்பகம், கடந்த ஆண்டு, 10.06 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. இதில், 6.5 கோடி ரூபாய் செலவில் சோழிங்கநல்லூர், மாத வரம், அம்பத்தூர் பால் பண்ணைகளின் கையாளும் திறனை அதிகரிப்பதற்காக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இது தவிர, திருவள்ளூர் காக்களூர் பால் பண்ணையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த, 4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பால் பண்ணையில் கூடுதலாக அறைகள், பால் கையாளும் உபகரணங்கள் பொருத்துவது உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.
தாமதம் : முதலில், இந்த பால் பண்ணையின் பால் கையாளும் திறனை 7,000 லிட்டரில் இருந்து 50 ஆயிரம் லிட்டராக உயர்த்துவதாக முடிவு செய்யப்பட்டு பணிகள் துவங்கின. பின்னர், ஒரு லட்சம் லிட்டராக உயர்த்த முடிவானது. இந்த மாற்றத்தால், பணிகள் ஒரு மாதம் தாமதமாகின. தற்போது மீண்டும் துவக்கப்பட்டுள்ளன.
ஆவின் அதிகாரி ஒருவர் கூறுகையில், "பால் பண்ணைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டு உபகரணங்கள் வாங்கப்பட்டு வருகின்றன. வரும், ஜூன் 2013க்குள் பணிகள் முடிந்து, 13 லட்சம் லிட்டர் வரை பால் கையாளும் திறன் ஏற்படும். இதனால், திட்டமிட்டபடி சென்னையில் பால் வினியோகம் அதிகரிக்கப்படும்' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|