பதிவு செய்த நாள்
20 ஜன2013
00:19
சிங்கப்பூர்:சர்வதேச மந்தநிலையால், வரும் 2013-14ம் நிதியாண்டில், நாட்டின் மருந்து ஏற்றுமதி இலக்கான 2,500 கோடி டாலரை (1.13 லட்சம் கோடி ரூபாய்) எட்டுவது என்பது, பெரிய சவாலாக இருக்கும் என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை செயலர் மிருதுல் ஜெயின் தெரிவித்தார்.
சிங்கப்பூர்:சிங்கப்பூரில், இந்திய மருந்துகள் கருத்தரங்கில் கலந்து கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:நடப்பு 2012-13ம் நிதியாண்டில், இந்தியாவின் மருந்து ஏற்றுமதி, 17 சதவீதம் வளர்ச்சி கண்டு,1,550 கோடி டாலராக (69,750 கோடி ரூபாய்) உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது,கடந்த 2011-12ம் நிதியாண் டில்,1,322 கோடி டாலராக இருந்தது.
உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், இந்திய மருந்து நிறுவனங்களுக்கு, அயல்நாடுகளில் இருந்து, ஆர்டர்கள் கிடைப்பது குறைந்துள்ளது. குறிப்பாக, ஆப்ரிக்கா மற்றும் மிகச் சிறிய அளவில் வளர்ச்சி கண்ட நாடுகளில், ஆரோக்கிய விழிப்புணர்வு பிரசாரங்கள் குறைந்துள்ளன. இந்த நிலையிலும், இந்திய மருந்து துறை, 15 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.பாரம்பரிய நாடுகளில் இருந்து மருந்துகளுக்கான ஆர்டர்கள் குறைந்துள்ள போதிலும், இதர பிரிவுகளில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதில், இந்திய மருந்து துறை தீவிரமாக முனைந்துள்ளது.
அமெரிக்கா:மத்திய அரசு, தரமான மருந்து பொருட்களை மட்டுமே ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற கொள்கை யை வகுத்துள்ளது. இதனால், ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகளில் "பார்கோடு' நடைமுறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.இந்தியாவின் மருந்து ஏற்றுமதியில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு, 55 சதவீதமாக உள்ளது.இது, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் கடுமையான விதிமுறைகளுக்கேற்ப, இந்திய மருந்துகள் தயாரிக்கப்படுவதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
கண்காட்சி:இந்தியாவில் இருந்து,220க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு, மருந்துகள் ஏற்றுமதியாகின்றன.கடந்த 2006- 07 முதல் 2011-12ம் நிதியாண்டு வரையில், இந்திய மருந்து துறை, ஒட்டுமொத்த அளவில், 15 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.இந்திய மருந்து ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்பு, மும்பையில் வரும் ஏப்ரல் 24ம் தேதி, சர்வதேச மருந்து மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு கண்காட்சியை நடத்த உள்ளது. இதில், 600க்கும் மேற்பட்ட இந்திய மருந்து நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.இவ்வாறு மிருதுல் ஜெயின் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|