பதிவு செய்த நாள்
04 பிப்2013
00:10
புதுடில்லி:சிறப்பு பொருளாதார மண்டலங்களில், முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள, குறைந்தபட்ச மாற்று வரியை (மேட்) திரும்பப் பெற வேண்டும் என, அசோசெம் கோரிக்கை விடுத்துள்ளது.மத்திய அரசு, நாட்டின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கத் திட்டமிட்டது.
இதன்படி, நாடு தழுவிய அளவில், 588 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்கு, முறைப்படியான ஒப்புதல் வழங்கியது. இதில், 161 மண்டலங்களே செயல்பாட்டில் உள்ளன.சென்ற செப்டம்பர் மாதம் வரையிலுமாக, இம்மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்ட மொத்த முதலீடுகளின் மதிப்பு, 2.19 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது. இம்மண்டலங்களில் தொழிற்சாலைகள் அமைத்துள்ள நிறுவனங்கள் வாயிலாக, 9 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
சிறப்பு பொருளாதார மண்டலங்களில், முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் மீது, மத்திய அரசு, கடந்த, 2010-11ம் ஆண்டு, குறைந்தபட்ச மாற்று வரி, டிவிடெண்டு வினியோக வரி ஆகியவற்றை விதித்தது.இது, இந்நிறுவனங்களுக்கு அதிக இடர்ப்பாடாக உள்ளதாக கருதப்படுகிறது. எனவே, இந்த வரி விதிப்புகளை திரும்பப் பெற வேண்டும் என, பல்வேறு தொழில் அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், வரும் 2013-14ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட், வரும் 28ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகளை திரும்பப் பெற வேண்டும் என, அசோசெம், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.சென்ற, 2011 - 12ம் நிதியாண்டில், நாட்டின் மொத்த ஏற்றுமதியில், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி மதிப்பு, 3.65 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|