பதிவு செய்த நாள்
22 பிப்2013
01:09
கோதுமை கொள்முதலில், புதிய சாதனை படைக்க திட்டமிட்டுள்ள, மத்திய அரசு, மிகப் பெரிய நெருக்கடிக்கு ஆளாகும் என, வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையம் எச்சரித்து உள்ளது.இதுகுறித்து, இவ்வாணைய தலைவரும், வேளாண் பொருளாதார விஞ்ஞானியுமான அசோக் குலாட்டி கூறியதாவது:மத்திய அரசு, வரும் 2013-14ம் சந்தைபடுத்தும் பருவத்தில் (ஏப்.,-மார்ச்), சாதனை அளவாக, 4.40 கோடி டன் கோதுமையை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.
உணவு தானியங்கள்:இது, நடப்பு 2012-13ம் சந்தைபடுத்தும் பருவத்தின் கொள்முதலை (3.81 கோடி டன்) விட, 15.36 சதவீதம் அதிகமாகும்.ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களை பாதுகாப்பாக, இருப்பில் வைக்க, போதுமான கிடங்குகள் இல்லாத நிலை உள்ளது.இந்நிலையில், இந்திய உணவு கழகம் மற்றும் மாநில முகமை அமைப்புகள் வசம், நிர்ணயிக்கப்பட்டதை விட, அதிக அளவில் உணவு தானியங்கள் இருப்பில் உள்ளன.அதாவது, நடப்பு பிப்ரவரி 1ம் தேதி நிலவரப்படி, மேற்கண்ட மத்திய, மாநில முகமை அமைப்புகளிடம், 6.63 கோடி டன் உணவு தானியங்கள் இருப்பில் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, தேவையான
அளவை விட, 200 சதவீதம் அதிகமாகும்.குறிப்பாக, அரிசி இருப்பு, நிர்ணயிக்கப்பட்ட 1.42 கோடி டன்னை விட அதிகமாக, அதாவது, 3.53 கோடி டன்னாக உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அது போன்று, 70 லட்சம் டன் என்ற அளவில், இருப்பில் இருக்க வேண்டிய கோதுமையின் அளவு, 3.08 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.
கிடங்குகள்:மத்திய, மாநில முகமை அமைப்புகளிடம், 7.15 கோடி டன் உணவு தானியங்களை சேமித்து வைப்பதற்கான கிடங்குகள் உள்ளன. இவற்றில், 1.86 கோடி டன் உணவு தானியங்களை வைக்கக் கூடிய கிடங்குகள், திறந்தவெளியில் அமைந்துள்ளன.
இந்நிலையில், வரும் சந்தைப் படுத்தும் பருவத்தில், கோதுமை மற்றும் நெல் கொள்முதலில் சாதனை படைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இத்தகைய நடவடிக்கையால், வெட்ட வெளியில் அதிக அளவில், உணவு தானியங்களை வைக்க நேரிடும். திடீர் மழை, புயல் உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளால், உணவு தானியங்கள் சீரழியும் வாய்ப்பு அதிகம் உள்ளது.நடவடிக்கை:இதை கருத்தில் கொண்டு, கிடங்குகளில் உள்ள உணவு தானியங்களை விரைவாக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அவ்வாறு செய்தால், வரும் ஜூன் 1ம் தேதி நிலவரப்படி, உணவு தானிய இருப்பு, 9 - 9.5 கோடி டன்னாக இருக்கும்.கிடங்கு பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்பையும் கட்டுப்படுத்தலாம்.இது தொடர்பாக, மத்திய அரசு அடுத்த சில வாரங்களுக்குள், மேலும், பல நடவடிக்கைகளை
எடுக்க வேண்டும்.தற்போது, உணவு தானியங்களை இருப்பு வைக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள வரம்பை நீக்க வேண்டும். இந்திய கிடங்கு துறை, அதிக அளவில் தனியார் முதலீடுகளை ஈர்க்கும் வரை, குறைந்தது, 10 ஆண்டுகளுக்கு இந்த வரம்பை தளர்த்தலாம்.உபரி உணவு தானியங்களை ஏற்றுமதி செய்யவும், முயற்சி மேற்கொள்ள வேண்டும். சென்ற, 2012ம் ஆண்டு, அதிக நெல் விளைச்சல் காரணமாக, இந்தியா, ஒரு கோடி டன் அரிசியை ஏற்றுமதி செய்தது. இதற்கு வியட்னாம் அரிசி ஏற்றுமதி குறைந்ததும் காரணமாகும்.
வியட்னாம்:ஆனால், நடப்பாண்டு, இந்தியாவின் அரிசி ஏற்றுமதி, 60 -70 லட்சம் டன் என்ற அளவிலேயே இருக்கும் என, தெரிகிறது. ஏனெனில், இந்தியாவின் போட்டியை சமாளிக்க, வியட்னாம் நாடு, அரிசி விலையை குறைத்து, ஏற்றுமதி செய்யத் துவங்கியுள்ளது.இத்தகைய அம்சங்களை கருத்தில் கொண்டு, மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்தால், உணவு தானிய கொள்முதல் காரணமாக ஏற்படும் நெருக்கடியை தவிர்க்கலாம். இவ்வாறு அசோக் குலாட்டி தெரிவித்தார்.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|