பதிவு செய்த நாள்
24 பிப்2013
00:29
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான, 10 மாத காலத்தில், நாட்டின், மொத்த நேரடி வரி வசூல், 4.55 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில், 4.25 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.வருமான வரி:நேரடி வரிகள் பிரிவின் கீழ், நிறுவனங்கள் செலுத்திய வரி, தனிநபர் வருமான வரி, பங்கு பரிவர்த்தனை வரி, செல்வ வரி ஆகியவை இடம்பெறுகின்றன.
மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், நேரடி வரிகள் வாயிலாக, 5.70 லட்சம் கோடி ரூபாய் வசூல் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், நிறுவனங்கள் செலுத்திய வரி, 3.71 சதவீதம் உயர்ந்து, 2.86 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 2.96 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. தனிநபர் வருமான வரி வசூல், 13.81 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.39 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 1.58 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.செல்வ வரி வசூல், 2.85 சதவீதம் அதிகரித்து, 666 கோடி ரூபாயில் இருந்து, 685 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
பங்கு வர்த்தகம்:அதேசமயம், பங்கு பரிவர்த்தனை வரி வசூல், 9.99 சதவீதம் சரிவடைந்து, 4,145 கோடி ரூபாயில் இருந்து, 3,731 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதற்கு, நாட்டின் பங்கு வர்த்தகம் நன்கு இல்லாததே காரணமாகும்.நடப்பு நிதியாண்டின், முதல் பத்து மாத காலத்தில், கூடுதலாக வரி செலுத்தியவர்களுக்கு, குறிப்பிட்ட அளவிற்கான தொகையே திரும்ப அளிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, நிகர நேரடி வரி வசூல், 3.90 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில் வசூலானதை (3.47 லட்சம் கோடி ரூபாய்) விட, 12.49 சதவீதம் அதிகமாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|