பதிவு செய்த நாள்
26 பிப்2013
08:25
புதுடில்லி: அடுத்த ஆண்டில், லோக்சபா தேர்தல் நடக்க உள்ளதால், ரயில்வே அமைச்சர், பவன் குமார் பன்சால் இன்று, பார்லிமென்டில் சமர்ப்பிக்க உள்ள, 2013-14ம் நிதியாண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டில், கட்டண உயர்வு இருக்காது என, பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ரயில் சேவையை மேம்படுத்தும், பல கவர்ச்சி அறிவிப்புகளுக்கு, பட்ஜெட்டில் பஞ்சமிருக்காது என, டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்தியில் ஆளும், காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பதவிகாலம், அடுத்த ஆண்டு, மே மாதம் முடிவடைகிறது. அதற்கு முன்னதாகவே, எந்நேரத்திலும் லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுவதால், இன்று சமர்ப்பிக்கப்பட உள்ள ரயில்வே பட்ஜெட்டில், பெரிய அளவில், கட்டண உயர்வுகள் இருக்காது என்பது, பொதுவான கருத்தாக உள்ளது. வாராது வந்த மாமணி போல, 16 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த ஆண்டு, காங்., வசம் ரயில்வே துறை கிடைத்த நிலையில், இவ்வாண்டு, ஜன., 22 முதல் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. சாதாரண ரயில் கட்டணம் முதல், "ஏசி' கட்டணங்கள் வரை, கி.மீ.,க்கு, 2 பைசா முதல் 10 பைசா வரை உயர்த்தப்பட்டதால், ரயில் பயணிகளின் அதிருப்திக்கு நிர்வாகம் ஆளானது. கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டு, ஒரு மாதமே ஆகும் நிலையில், மீண்டும், ஒரு கட்டண உயர்வை, ரயில்வே பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாது என்பது, பெரும்பாலானோரின் கருத்து.
ரயில்வே அமைச்சராக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள, காங்., முன்னணி தலைவர்களில் ஒருவரான, பவன்குமார் பன்சாலின், முதல் ரயில்வே பட்ஜெட் இது என்பதால், அதில் பல கவர்ச்சிகர அம்சங்களை, அவர் புகுத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தன் முதல் பட்ஜெட்டை, முத்தான பட்ஜெட்டாக சமர்ப்பிக்க விரும்பிய பன்சால், அதற்காக, காங்., தலைவர், சோனியா, நிதியமைச்சர், சிதம்பரம், திட்டக்கமிஷன் உறுப்பினர்கள் மற்றும் துணைத் தலைவரை, பல முறை சந்தித்து ஆலோசனைகள் பெற்றுள்ளார். ரயில் பயணிகளை கவரும் விதத்தில், பல அறிவிப்புகளை, தன் கன்னி பட்ஜெட்டில் இடம்பெற செய்ய, பன்சால் முயற்சிப்பார். குறிப்பாக, ரயிலில் வழங்கப்படும், உணவின் தரத்தை மேம்படுத்துவது, ரயில் பெட்டிகள் மற்றும் ரயில்வே ஸ்டேஷன்களில் சுத்தம், சுகாதாரத்தை பேணுவது, பெட்டிகளில் பயணம் செய்யும், பார்வையற்றவர்களும் உணரும் விதத்தில், "பிரெய்லி' எழுத்து ஸ்டிக்கர் அறிவிப்புகள் அறிமுகம் என, பல புதுமையான திட்டங்கள், இன்றைய பட்ஜெட்டில் அறிமுகமாகும். பொதுமக்கள், ரயில் பயணிகளை, பாதிக்காத வகையில், பட்ஜெட் இருந்தாலும், ரயில்வே துறைக்கு வருமானத்தை அதிகரிக்கும் வகையில், சரக்கு கட்டண உயர்வு, பட்ஜெட்டில் இருக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் பன்சாலின் அறிவிப்புகளில், "ஏசி' இரண்டடுக்கு ரயில்கள் உட்பட, 100 புதிய ரயில்கள், மணிக்கு, 160 கி.மீ., வேகத்தில் செல்லும், அதிவேக ரயில்கள் போன்றவை, இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக, "ஸ்பார்ட்' எனப்படும், விபத்து நிவாரண அதிவேக ரயில்களுக்கான அறிவிப்பும், இன்று வெளியாகலாம். மேலும், ராஜஸ்தானில், 1,000 கோடி ரூபாய் முதலீட்டில், எலக்ட்ரிக் ரயில் பெட்டிகள் மற்றும் ரயில் தயாரிப்பு தொழிற்சாலை துவக்குவதற்கான, அறிவிப்பு வெளியாகும். வரும் நிதியாண்டில், புதிதாக, 4,200 பயணிகள், ரயில் பெட்டிகள் தயாரிப்பதற்கான அறிவிப்பு, 670, "லோகோமோடிவ்' எனப்படும், மின்சார ரயில் இன்ஜின், 16 ஆயிரம், புதிய சரக்கு பெட்டிகள் தயாரிப்பு போன்றவற்றிற்கான அறிவிப்பு இருக்கலாம். நிதி நெருக்கடியால், சிக்கித்தவிக்கும் ரயில்வே துறையில், முடங்கியுள்ள, 1.47 லட்சம் கோடி ரூபாய் பெறுமான, 347 ரயில் திட்டங்களில் முக்கியமான சில திட்டங்களை செயல்படுத்துவதற்கான, அறிவிப்புகளும் அதில் இடம் பெறலாம். நடப்பு, 12வது திட்ட காலத்தில் (2012 - 17), 2 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு, பட்ஜெட் ஒதுக்கீடு வழங்கப்படும் என, திட்டக்கமிஷன் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், 1 லட்சம் கோடி ரூபாய்க்கான வருவாய் வாய்ப்புகளை, திட்ட காலத்தில், ரயில்வே துறையே ஏற்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதால், அதற்கான வாய்ப்புகள் குறித்தும், பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகலாம். குறிப்பாக, 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, துறை ரீதியிலான நிதி சேகரிப்பு மற்றும் சந்தைக்கடன் போன்றவை மூலம், ரயில்வே துறை சேகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.இன்று காலை தாக்கல் செய்யப்படும் ரயில்வே பட்ஜெட்டில் தமிழக மக்களின் ஆசை நிறைவேறுமா என்பது தெரிந்து விடும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|