பதிவு செய்த நாள்
27 பிப்2013
00:59
புதுடில்லி:டீசல் நிலையங்களில், மானிய மற்றும் மானியம் அல்லாத விலைகளில் டீசல் விற்பனை செய்யும் நடைமுறையை அமல்படுத்துவது கடினம் என, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்து உள்ளார்.
சில்லரை விலை:இது குறித்து, அவர் ராஜ்யசபாவில் மேலும் கூறியதாவது:டீசலுக்கு, மொத்த விலை மற்றும் சில்லரை விலை என, இரு வகை விலை நிர்ணயம் செய்யப் பட்டது, அரசின் கொள்கை முடிவாகும். டீசலுக்கான மானியச் சுமையை, நியாயமான அளவிற்கு குறைக்கும் நோக்குடன், இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஒரு பெட்ரோல் நிலையத்தில், மானியம் மற்றும் மானியம் அல்லாத இரு வேறு விலைகளில், டீசல் விற்பனை செய்வது சாத்தியமா என்பது குறித்து தீவிரமாக ஆராயப்பட்டது.கள்ளச்சந்தைக்கு வழி வகுக்காத வகையில், இத்தகைய விற்பனையை நடைமுறைப்படுத்துவது குறித்த பொதுமக்களின் ஆலோசனையை, அரசு வரவேற்கிறது.
மத்திய அரசை பொறுத்தவரை, கடந்த, 2007-12ம் ஆண்டுகள் வரையிலான காலத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் சார்ந்த உற்பத்தி வரி வருவாய் குறைந்தது.கடந்த, 2007ம் ஆண்டு மார்ச், 1ம் தேதி நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் மீதான மத்திய உற்பத்தி வரி, 14.66 ரூபாயாக இருந்தது. இது, 2012ம் ஆண்டு செப்டம்பர், 14ம் தேதி நிலவரப்படி, 9.46 ரூபாயாக குறைந்தது.
அது போன்று, இதே காலத்தில் டீசல் மீதான உற்பத்தி வரி, 4.69 ரூபாயில் இருந்து, 3.56 ரூபாயாக குறைந்து உள்ளது.மத்திய அரசு, கடந்த, 2011-12ம் நிதியாண்டில்,பெட்ரோலியப் பொருட்கள் மீதான சுங்கம் மற்றும் உற்பத்தி வரி மூலம், 95,349 கோடி ரூபாய் திரட்டியது. இது கடந்த, 2010-11ம் நிதியாண்டில், 1,02,827 கோடி ரூபாயாக அதிகரித்து இருந்தது. நடப்பாண்டில், மத்திய அரசை விட, ஒட்டுமொத்த மாநில அரசுகளின் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி வருவாய் அதிகரிக்கும்.
உற்பத்தி வரி:கடந்த மூன்று ஆண்டுகளாக, பெட்ரோலியப் பொருட்களுக்கான சுங்கம் மற்றும் உற்பத்தி வரி விதிப்பும், அவற்றின் மீதான வருவாயும் குறைந்து வருகிறது. விலை உயர்வை கருத்தில் கொண்டும், நுகர்வோர் நலன் கருதியும், மத்திய அரசு, அண்மைக் காலமாக, மதிப்பின் அடிப்படையிலான வரி விகிதத்திலிருந்து, குறிப்பிட்ட வரி விகித நடைமுறையை அமல்படுத்தி வருகிறது.இவ்வாறு, சிதம்பரம் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|