பதிவு செய்த நாள்
12 மார்2013
01:44
புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, தொடர்ந்து, இரண்டாவது மாதமாக, சென்ற பிப்ரவரி மாதத்தில், 2,626 கோடி டாலராக (1.44 லட்சம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.இது, கடந்த நிதியாண்டின், இதே பிப்ரவரி மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (1.39 லட்சம் கோடி ரூபாய்) விட, 4.25 சதவீதம் அதிகம் என, மத்திய வர்த்தக செயலர் எஸ்.ஆர்.ராவ் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி:சென்ற பிப்ரவரி மாதத்தில், நாட்டின், இறக்குமதி, 2.6 சதவீதம் என்ற குறைந்த அளவில் உயர்ந்து, 4,118 கோடி டாலராக (2.26 லட்சம் கோடி ரூபாய்) இருந்தது.
இதையடுத்து, கணக்கீட்டு மாதத்தில், நாட்டின், வர்த்தக பற்றாக்குறை, 1,492 கோடி டாலராக (82,060 கோடி ரூபாய்) குறைந்து உள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே மாதத்தில், 1,493 கோடி டாலராக (82,115 கோடி ரூபாய்) இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்றுமதியை விட, இறக்குமதி அதிகரித்து வருவதால், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்தது. இதனால், நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்து வந்தது. இது, மத்திய அரசுக்கு, அதிக இடையூறு அளிப்பதாக இருந்தது. இந்நிலையில், தற்போது, ஏற்றுமதி அதிகரித்து, இறக்குமதி சற்று குறைந்துள்ளது என்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என, ராவ் குறிப்பிட்டுள்ளார்.அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பத் துவங்கியுள்ளதால், அந்நாடுகளில், இந்திய பொருட்களுக்கான தேவை உயர்ந்து வருகிறது.கடந்த ஒரு சில மாதங்களாக, பொறியியல், ஜவுளி, அரிசி, புண்ணாக்கு, தரைவிரிப்புகள், புகையிலை, மருந்து, இடைநிலை ரசாயன பொருட்கள், நறுமண பொருட்கள் மற்றும் கடல் உணவு பொருட்கள் போன்றவற்றின் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்து வருகிறது.
அமெரிக்கா:இதனால், இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்து, வர்த்தக பற்றாக்குறை குறையும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. கடந்த 2012ம் ஆண்டு மே மாதம் முதல், அவ்வாண்டு டிசம்பர் மாதம் வரையிலான எட்டு மாதங்களில், நாட்டின் ஏற்றுமதி தொடர்ந்து சரிவடைந்து வந்தது. இந்நிலையில், நடப்பு 2013ம் ஆண்டு ஜனவரியில், நாட்டின் ஏற்றுமதி, 0.8 சதவீதம் உயர்ந்திருந்தது. இது, சென்ற பிப்ரவரியில் 4.25 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.நாட்டின், ஒட்டுமொத்த ஏற்றுமதியில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. இச்சூழ்நிலையில், அமெரிக்காவின் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளதால், இனி, அந்நாட்டிற்கான, இந்தியாவின் ஏற்றுமதி மேலும் உயர வாய்ப்புள்ளது என, எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான, 11 மாத காலத்தில், நாட்டின் ஏற்றுமதி, 4 சதவீதம் சரிவடைந்து, 26,595 கோடி டாலராக (14.62 லட்சம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில், 27,710 கோடி டாலராக (15.24 லட்சம் கோடி ரூபாய்) இருந்தது.இதே காலத்தில், நாட்டின், இறக்குமதி 0.25 சதவீதம் உயர்ந்து, 44,690 கோடி டாலரில் இருந்து, 44,804 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இதையடுத்து, கணக்கீட்டு காலத்தில், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, 16,980 கோடி டாலரில் இருந்து, 18,210 கோடி டாலராக அதிகரித்துள்ளது.நாட்டின், இறக்குமதி அதிகரிப்பிற்கு, கச்சா எண்ணெய் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்கள் மற்றும் தங்கம் இறக்குமதியின் பங்களிப்பே மிகவும் அதிகமாக உள்ளது.
கச்சா எண்ணெ#பிப்ரவரி வரையிலான, 11 மாத காலத்தில், கச்சா எண்ணெய் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி, கடந்த நிதியாண்டின், இதே காலத்தை விட, 11.9 சதவீதம் அதிகரித்து, 13,900 கோடி டாலரில் இருந்து, 15,500 கோடி டாலராக அதிகரித்துள்ளது.இந்நிலையில், தங்கம் இறக்குமதியை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் காரணமாக, கணக்கீட்டு காலத்தில், தங்கம் இறக்குமதி, 7.6 சதவீதம் குறைந்து, 5,670 கோடி டாலரில் இருந்து, 5,240 கோடி டாலராக குறைந்துள்ளது என, வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|