பதிவு செய்த நாள்
14 மார்2013
01:14
புதுடில்லி:வரும் ஏப்ரலில் துவங்கும் 2013-14ம் நிதிஆண்டில், அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறையும் என்று தெரிகிறது. புதிய வட்டி விகிதம் குறித்த அறிவிப்பு, இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என, மத்திய நிதி அமைச்சக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கி துணை கவர்னர் சியாமளா கோபிநாத் தலைமையிலான குழு, தேசிய சிறு சேமிப்பு நிதியம் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்களை மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.இதன்படி, அரசு கடன் பத்திர முதலீடுகளில், ஓராண்டு சராசரி வருவாயின் அடிப்படையில், அதே முதிர்வு காலம் கொண்ட தேசிய சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படும்.
இந்நிலையில், சென்ற 2012ம் ஆண்டில், ஐந்தாண்டு முதிர்வு காலம் கொண்ட அரசு கடன் பத்திரங்களின் மீதான ஆண்டு சராசரி வருவாய், 8.51 சதவீதத்தில் இருந்து, 8.41 சதவீதமாக குறைந்துள்ளது. அதுபோன்று, 10 ஆண்டு முதிர்வு காலத்தை கொண்ட அரசு கடன் பத்திரங்களின் மீதான ஆண்டு சராசரி வருவாய், 8.51 சதவீதத்தில் இருந்து, 8.45 சதவீதமாக சரிவடைந்துள்ளது.
இவற்றின் அடிப்படையில் கணக்கிட்டால், வரும் நிதியாண்டில், அஞ்சலக சேமிப்பு திட்ட முதலீடுகளுக்கு வட்டி குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது, ஐந்து மற்றும் பத்தாண்டு முதிர்வு காலம் கொண்ட, தேசிய சேமிப்பு பத்திர முதலீடுகளுக்கு, வட்டி விகிதம், முறையே, 8.6 மற்றும் 8.9 சதவீதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பொது சேம நல நிதிய முதலீடுகளுக்கான வட்டி விகிதம், 8.8 சதவீதமாக உள்ளது.மத்திய அரசு, வரும் நிதியாண்டில், பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்கள் மூலம், 5,800 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி குழு பரிந்துரைப்படி வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டால், திட்டமிட்ட முதலீட்டு இலக்கை எட்டுவது சிரமம் என, நிதி ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|