பதிவு செய்த நாள்
15 மார்2013
05:57
புதுடில்லி:கடந்த 20 ஆண்டுகளாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விட, வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது என, பார்லிமென்ட் விவகாரங்கள் மற்றும் திட்டமிடல் துறை இணை அமைச்சர் ராஜிவ் சுக்லா, ராஜ்யசபாவில் தெரிவித்தார்.
வளர்ச்சி விகிதம்:அவர் மேலும் கூறியதாவது:12வது ஐந்தாண்டு திட்டத்தில் வேலை வாய்ப்பு குறித்து, பணிக் குழு அறிக்கை அளித்துள்ளது. அதில், கடந்த 20 ஆண்டுகளாக, வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம், இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதத்தை விட குறைவாக உள்ளதாகவும், வேலைவாய்ப்பின் தரம், உற்பத்தி அளவு ஆகியவை கவலைக்குரிய அம்சங்களாக உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பை அதிகரிக்காதவரை, போதுமான வளர்ச்சி விகிதத்தை எட்ட முடியாது. வேலைவாய்ப்புகள், அனைத்து துறைகளை உள்ளடக்கியதாகவும், அதிக அளவில் உற்பத்தி சார்ந்தவையாகவும் இருக்க வேண்டும்.இவற்றை கருத்தில் கொண்டு, நடுத்தர கால அடிப்படையில், தயாரிப்பு துறையின் வளர்ச்சி விகிதத்தை 12 -14 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம், வரும் 2025ம் ஆண்டிற்குள், 10 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நவரத்தினங்கள்:ஜவுளி, தோல், காலணிகள், நவரத்தினங்கள், ஆபரணங்கள், உணவு பதப்படுத்தல் உள்ளிட்ட வேலை சார்ந்த துறைகளையும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களையும்ஊக்குவிக்க வேண்டும்.திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, இப்பிரிவில், பொதுத் துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் பங்களிப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.
தொழிலாளர்களுக்கு சிறப்பான ஊதியம் வழங்கக்கூடிய, உற்பத்தி சார்ந்த துறைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், தொழிலாளர் நல கொள்கைளை எளிமைப்படுத்தி, சீர்படுத்த வேண்டும்.இத்தகைய செயல்பாடுகள் மூலம் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்கலாம் என, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|