பதிவு செய்த நாள்
20 மார்2013
01:10
மும்பை:ரிசர்வ் வங்கியின் கவர்னர் டீ.சுப்பாராவ், இடைநிலை காலாண்டு அறிக்கையை, நேற்று வெளியிட்டார். இதில், வங்கிகளுக்கான, "ரெப்போ' வட்டி விகிதங்கள், 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, இந்த வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
"ரெப்போ' வட்டி விகிதம்:வங்கிகள், குறுகிய கால அடிப்படையில், ரிசர்வ் வங்கியிடமிருந்து வாங்கும் "ரெப்போ' வட்டி விகிதம், 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு, 7.75 சதவீதத்திலிருந்து, 7.50 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதே போன்று, வங்கிகள், ரிசர்வ் வங்கிக்கு வழங்கும், "ரிவர்ஸ் ரெப்போ' வட்டி விகிதமும், 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு, 6.75 சதவீதத்திலிருந்து, 6.50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், வங்கிகள் திரட்டும் மொத்த டெபாசிட்டில், குறிப்பிட்ட தொகையை, ரிசர்வ் வங்கியில் வைக்கும், ரொக்க இருப்பு விகிதத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல், 4 சதவீதம் என்ற அளவிலேயே விடப்பட்டுள்ளது.மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப் படும், நாட்டின் பொது பணவீக்கம், சென்ற பிப்ரவரி மாதத்தில், 6.84 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இது, சென்ற ஜனவரி மாதத்தில், 6.62 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இருப்பினும், கடந்த ஆண்டு, பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது, நடப்பாண்டு பிப்ரவரி மாதத்தில், பணவீக்கம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.சென்ற பிப்ரவரி மாதத்தில், நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும், சில்லரை பணவீக்கமும், 10.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.இது, முந்தைய ஜனவரி மாதத்தில், 10.79 சதவீதம் என்ற அளவில் காணப்பட்டது.
விவசாயம்:இந்நிலையில், கடந்த ஒரு சில காலாண்டுகளாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. விவசாயம், சுரங்கம் மற்றும் தயாரிப்பு துறைகளில் ஏற்பட்டுள்ள மந்த நிலையால், சென்ற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 4.5 சதவீதம் என்ற அளவில் மிகவும் சரிவடைந்திருந்தது.
செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டிலும், பொருளாதார வளர்ச்சி, எதிர்பார்ப்பை விட, குறைவாக, 5.3 சதவீதம் என்ற அளவிலேயே இருந்தது.மேலும், ஏற்றுமதியை விட, இறக்குமதி அதிகரித்துள்ளதால், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, 5.4 சதவீதமாக மிகவும் அதிகரித்திருந்தது.
இதையடுத்து, மத்திய அரசு, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, அன்னிய முதலீட்டை கவரும் வகையில், பல்வேறு சலுகை திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சலுகை திட்டங்கள் :பொருளாதார வளர்ச்சிக்கு, மத்திய அரசின், சலுகை திட்டங்கள் மட்டும் போதாது. தொழிற் துறை உற்பத்தியை மேம்படுத்த, வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்து, பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில், ரிசர்வ் வங்கியும், கொள்கை திட்டங்களை வகுத்திட வேண்டும் என, அரசும், இதர அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வந்தன.
இதையடுத்தே, பணவீக்கம் எதிர்பார்த்ததை விட அதிகரித்துள்ள நிலையிலும், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை, 0.25 சதவீதம் குறைத்துள்ளது.ஆனால், வட்டி விகிதங்களை மேலும் குறைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது என, ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், எரிபொருட்கள் விலை உயர்வு, மானியச் செலவு அதிகரித்து வருவது, இறக்குமதி செலவினம் உயர்வு, வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்ந்து வருவது போன்றவற்றால், நாட்டின் பணவீக்கம் மேலும் உயரும் என்ற மதிப்பீடும் உள்ளது.
வட்டி விகித குறைப்பால் மட்டுமே, முதலீட்டு திட்டங்களை அதிகரிக்க முடியாது. தேவைக்கு ஏற்ப, பொருட்களின் அளிப்பை அதிகரிப்பதுடன், மத்திய அரசு, நிதி சீர்திருத்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என, ரிசர்வ் வங்கி, அதன் ஆய்வுஅறிக்கையில் தெரிவித்துள்ளது.
தொழில் துறை:நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5.5 சதவீதம் என்ற அளவிலும், பொதுப்பணவீக்கம், 6.8 சதவீதம் என்ற அளவிலும் இருக்கும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இதுகுறித்து, மத்திய திட்டக்குழு துணைத் தலைவர், மான்டேக் சிங், அலுவாலியா கூறுகையில், "வங்கிகளுக்கான வட்டி விகிதம், குறைக்கப்பட்டுள்ளதால், தொழில் துறை உற்பத்தி மேம்படும். நீண்ட கால அடிப்படையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த வட்டி குறைப்பு உதவி புரியும்' என்று தெரிவித்தார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|