பதிவு செய்த நாள்
20 மார்2013
20:37
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம் புதன்கிழமையன்றும் மிகவும் மோசமாகவே இருந்தது. மத்திய அரசுக்கு, அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்ற நிலைப்பாட்டால், முதலீட்டாளர்கள், லாப நோக்கம் கருதி, பங்குகளை அதிகளவில் விற்பனை செய்தனர். இதையடுத்து, "சென்செக்ஸ்' குறியீட்டு எண், 19,000 புள்ளிகளுக்கும் கீழ் சரிவடைந்து போனது.இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது. இருப்பினும், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்கு இருந்தது.நேற்றைய வர்த்தகத்தில், ரியல் எஸ்டேட், மின்சாரம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், நுகர்பொருட்கள், நுகர்வோர் சாதனங்கள், தகவல் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை இருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 123.91 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 18,884.19 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,028.09 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,836.77 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், என்.டி.பி.சி., பார்தி ஏர்டெல், உள்ளிட்ட, 19 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், டாட்டா மோட்டார்ஸ் இந்துஸ்தான் யூனிலிவர், உள்ளிட்ட, 11 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 51.55 புள்ளிகள் சரிவடைந்து, 5,694.40 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,745.30 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,682.30 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|