பதிவு செய்த நாள்
07 ஏப்2013
00:10
புதுடில்லி:கடந்த, 2012-13ம் நிதியாண்டில், இந்தியாவில் உள்ள பெரிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கின் அளவு, 54.57 கோடி டன்னாக, சற்று சரிவடைந்துள்ளது என, இந்திய துறைமுகங்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள, தற்காலிக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற, 2011-12ம் நிதியாண்டில், இத்துறைமுகங்கள் கையாண்ட சரக்கின் அளவு, 56 கோடி டன்னாக இருந்தது. ஆக, கணக்கீட்டு நிதியாண்டில், பெரிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கின் அளவு, 2.58 சதவீதம் சரிவடைந்துள்ளது.
பொருளாதார சுணக்க நிலை:அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள, பொருளாதார சுணக்க நிலையால், அந்நாடுகள் இறக்குமதியை குறைத்து கொண்டுள்ளன. நம்நாட்டிற்கு, முக்கிய சந்தைகளாக திகழும், மேற்கண்ட நாடுகளுக்கான ஏற்றுமதி குறைந்ததையடுத்து, இந்திய துறைமுகங்கள் கையாண்ட, சரக்கின் அளவும் குறைந்துள்ளது.மேலும், இந்தியாவில், இரும்புத் தாது உற்பத்தியாகும் முக்கிய மாநிலங்களில், முறைகேடாக இரும்புத் தாது வெட்டி எடுக்கப்பட்டதை அடுத்து, இதற்கு, சுப்ரீம் கோர்ட் தடைவிதித்தது. இதுவும், ஒட்டு மொத்த அளவில், பல துறைமுகங்களின், சரக்கு ஏற்றுமதி குறைவிற்கு முக்கிய காரணம் என, தெரியவந்துள்ளது.
உள்நாட்டில், 13 பெரிய துறைமுகங்கள் உள்ளன. இதில், கோல்கட்டாவில் மட்டும், கோல்கட்டா டாக் சிஸ்டம்ஸ், ஹால்டியா டாக் காம்ப்ளக்ஸ் என, இரண்டு துறைமுகங்கள் உள்ளன. இவ்விரு துறைமுகங்களுமாக, சென்ற நிதியாண்டில், 3.99 கோடி டன் சரக்கை கையாண்டு உள்ளன. இது, முந்தைய 2011-12ம் நிதியாண்டில், கையாண்ட சரக்கின் அளவை (4.32 கோடி டன்) விட, 7.78 சதவீதம் குறைவாகும்.இவற்றுள், கோல்கட்டா டாக் சிஸ்டம்ஸ் நிறுவனம், கையாண்ட சரக்கின் அளவு, 3.54 சதவீதம் சரிவடைந்து, அதாவது, 1.22 கோடி டன்னிலிருந்து, 1.18 கோடி டன்னாகவும், ஹால்டியா டாக் காம்ப்ளக்ஸ் கையாண்ட சரக்கு, 9.45 சதவீதம் குறைந்து, 3.10 கோடி டன்னிலிருந்து, 2.81 கோடி டன்னாகவும் சரிவடைந்துள்ளன.
அதேசமயம், சென்ற நிதியாண்டில், பரதீப் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 4.24 சதவீதம் அதிகரித்து, 5.43 கோடி டன்னிலிருந்து, 5.66 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. அதேசமயம், விசாகப்பட்டினம் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 12.55 சதவீதம் சரிவடைந்து, 6.74 கோடி டன்னிலிருந்து, 5.90 கோடி டன்னாக குறைந்துள்ளது.
எண்ணூர் துறைமுகம்:கணக்கீட்டு நிதியாண்டில், எண்ணூர் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 19.58 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.50 கோடி டன்னிலிருந்து, 1.79 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. இருப்பினும், சென்னை துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 4.13 சதவீதம் குறைந்து, 5.57 கோடி டன்னிலிருந்து, 5.34 கோடி டன்னாக சரிவடைந்து உள்ளது.தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 0.55 சதவீதம் உயர்ந்து, 2.81 கோடி டன்னிலிருந்து, 2.83 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.
கொச்சி துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 1.22 சதவீதம் குறைந்து, 2 கோடி டன்னிலிருந்து, 1.98 கோடி டன்னாக சரிவடைந்து உள்ளது. புதிய மங்களூர் துறைமுகம் கையாண்ட சரக்கு, 12.43 சதவீதம் வளர்ச்சி கண்டு, 3.29 கோடி டன்னிலிருந்து, 3.70 கோடி டன்னாக அதிகரித்து உள்ளது.அதேசமயம், மர்மகோவா துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 54.63 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 3.90 கோடி டன்னிலிருந்து, 1.77 கோடி டன்னாக மிகவும் சரிவடைந்துள்ளது.
மும்பை துறைமுகம்:சென்ற நிதியாண்டில், மும்பை துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 3.29 சதவீதம் வளர்ச்சி கண்டு, 5.62 கோடி டன்னிலிருந்து, 5.80 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. ஜவஹர்லால் நேரு துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 1.87 சதவீதம் குறைந்து, 6.57 கோடி டன்னிலிருந்து, 6.45 கோடி டன்னாக சரிவடைந்து உள்ளது.
அதேசமயம், கண்ட்லா துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 13.48 சதவீதம் வளர்ச்சி கண்டு, 8.25 கோடி டன்னிலிருந்து, 9.36 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|