பதிவு செய்த நாள்
20 ஏப்2013
00:18
புதுடில்லி:நாகையில், அரசு மற்றும் தனியார் கூட்டுடன், புதிய துறைமுகம் அமைக்க, விரைவில் ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட உள்ளதாக, தகவல் வெளியாகிஉள்ளது.
புதிய துறைமுகம்:தற்போது, கடுவையாற்று கழிமுகப் பகுதியில் உள்ள, சிறிய துறைமுகத்தை ஒட்டி, புதிய துறைமுகம் அமைய உள்ளது.இதன் மூலம், நாகை, விழுப்புரம், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தஞ்சாவூர், திருவாரூர் பகுதிகளின் வளர்ச்சி மேம்படும்.பழைய துறைமுகத்தில், கோதுமை, உரம் போன்றவை சிறிய அளவில் கையாளப்பட்டு வந்தன. மத்திய அரசின் கொள்கை முடிவு காரணமாக, தற்போது கோதுமை, உரம் ஆகியவற்றின் இறக்குமதி குறைந்துள்ளது.
இதனால், இத்துறைமுகத்தின் செயல்பாடும் சுணக்கம் கண்டுள்ளது.எனினும், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், அதன் நரிமணம் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து டீசல், நாப்தா போன்றவற்றை, துறைமுகத்திற்கு உட்பட்ட பகுதியில் இருந்து அனுப்பி வருகிறது.துறைமுகத்தை சுற்றி, நாகப்பட்டினம் நகர் அமைந்துள்ளதால், அத்துறைமுகத்தை மேம்படுத்த முடியாத நிலை உள்ளது.
வரலாற்று சிறப்புகள்:இதன் காரணமாகவே, புதிய துறைமுகத்தை அமைக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. நாகை துறைமுகத்திற்கு, பல்வேறு வரலாற்று சிறப்புகள் உண்டு. இது, போர்ச்சுகீசியர்களின் ஆட்சியில், முக்கிய துறைமுகமாக விளங்கியது. பின்னர், 1660 -1781 ம் ஆண்டு வரை, டச்சு நாட்டவரின் கட்டுப்பாட்டில் இருந்தது.
அதன் பின்னர், ஆங்கிலேயர் ஆட்சியின் போது, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுடன், பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்து நடைபெற்றது.
ஆய்வு அறிக்கை:சென்னை, இந்திய தொழில்நுட்ப மையம், 380 கோடி ரூபாய் செலவில், நாகையில் புதிய துறைமுகம் அமைப்பதற்கான தொழில்நுட்ப, பொருளாதார ஆய்வறிக்கையை அளித்துள்ளது.இதன் அடிப்படையில், சென்ற ஜனவரியில், புதிய துறைமுகம் அமைப்பதற்கான ஒப்புதலை தமிழக அரசு வழங்கியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|