பதிவு செய்த நாள்
03 மே2013
15:03
கோடை வெயிலால், டாஸ்மாக் கடைகளில், சென்ற ஏப்ரல் மாதத்தில், 4.50 கோடி பாட்டில் பீர் விற்பனையாகியுள்ளது. தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, ஒரு வாரத்துக்கு தேவையான, பீர் இருப்பு, கடைகளில் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 6,500க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில், பீர் விலை, "பிராண்டு'க்கு ஏற்றாவாறு, 80 ரூபாய் முதல், 120 ரூபாய் வரை நிர்ணயம் செய்து, அரசு விற்பனை செய்து வருகிறது.
கடந்த ஆண்டை காட்டிலும், நடப்பாண்டில், கோடை வெயில், சென்னை உட்பட பல மாவட்டங்களில், வாட்டி வதைக்கிறது. இதை சாதமாக பயன்படுத்தி, கடைகளில் பீர் விற்பனையை அதிகரிக்க, டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதனால், கடைகளுக்கு, விஸ்கி, பிராந்தி போன்ற, "ஹார்டு டிரிங்ஸ்' விட, பீர் சப்ளையை, அதிகளவில் வழங்கி வருகிறது. கோடை வெயிலால், மது பிரியர்கள் அதிக அளவில், பீர் குடிக்கத் துவங்கியுள்ளளனர். இதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து, டாஸ்மாக் கடைகளிலும், பீர் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
இது குறித்து, தென் மாவட்ட டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஒரு கடையில், நாளென்றுக்கு சராசரியாக, 30 பெட்டிகளாக இருந்த பீர் விற்பனை, சென்ற ஏப்ரலில், இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில், மாதத்திற்கு பீர் விற்பனை சராசரியாக, 25 லட்சம் பெட்டிகளாக இருக்கும். வெயிலில், மது பிரியர்கள் அதிகளவில் பீர் குடிக்க துவங்கியுள்ளதால், சென்ற ஏப்ரலில், 37 லட்சம் பீர் பெட்டிகள், அதாவது, 4.50 கோடி பீர் பாட்டில்கள் விற்பனையாகியுள்ளன. இதன் மதிப்பு, 450 கோடி ரூபாய். இது, முந்தைய மார்ச் மாதத்தை விட, 15 சதவீதம் அதிகம். இவ்வாறு, அவர் கூறினார்.
" ஜில் பீர் கிடைக்கவில்லை' ; தமிழகத்தில் நிலவி வரும் மின் வெட்டால், சென்னை உட்பட, பல மாவட்டங்களில், டாஸ்மாக் கடைகளில், "ஜில்' பீர் விநியோகிப்பதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. காஞ்சி, திருவள்ளூர், கோவை மாவட்டங்களில், பீர் விற்பனை மந்தமாக உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|