பதிவு செய்த நாள்
04 மே2013
00:45
புதுடில்லி:கடந்த, 2012-13ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான, 11மாதக் காலத்தில், நாட்டின் ஜவுளி ஏற்றுமதி, 2,840 கோடி டாலராக (1.56 லட்சம் கோடி ரூபாய்) இருந்தது என, மத்திய ஜவுளி அமைச்சர் ஆனந்த் சர்மா, தெரிவித்தார்.இலக்கு:கடந்த நிதியாண்டில், 3,960 கோடி டாலர் (2.18 லட்சம் கோடி ரூபாய்) மதிப்பிற்கு, ஜவுளி வகைகள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், சர்வதேச பொருளாதார நெருக்கடியால், இந்த இலக்கு எட்டப்பட வாய்ப்பில்லை.
மத்திய அரசு, பாரம்பரிய சந்தைகள் தவிர, புதிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில், நடவடிக்கை மேற்கொண்டது. குறிப்பாக, ஜப்பான், ஆஸ்திரேலியா, இஸ்ரேல், லத்தீன் அமெரிக்கா, ஆப்ரிக்கா, தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு, ஜவுளி வகைகளை ஏற்றுமதி செய்யும் வகையில், நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த, 2009ம் ஆண்டில், சர்வதேச ஜவுளி ஏற்றுமதியில், இந்தியாவின் பங்களிப்பு, 3.87 சதவீதமாக இருந்தது. இது, 2010ம் ஆண்டில், 3.98 சதவீதமாகவும், 2011ம் ஆண்டில், 4.10 சதவீதமாகவும் அதிகரித்திருந்தது.
ஊக்குவிப்பு திட்டங்கள்:கடந்த, 2009 -10ம் நிதியாண்டில், நாட்டின் ஜவுளி ஏற்றுமதி, 2,240 கோடி டாலராக இருந்தது. இது, 2010 -11ம் நிதியாண்டில், 2,770 கோடி டாலராகவும், 2011 - 12ம் நிதியாண்டில், 3,331 கோடி டாலராகவும் அதிகரித்து காணப்பட்டது.இந்நிலையில், சென்ற நிதியாண்டின் முதல், 11 மாத காலத்தில், ஜவுளி ஏற்றுமதி, 2,840 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது.நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், மத்திய அரசு, பல்வேறு ஊக்குவிப்பு திட்டங்களை அறிவித்துள்ளது.குறிப்பாக, கைவினைப் பொருட்கள், கைத்தறி, தரைவிரிப்புகள், ஆடைகள் ஆகியவற்றின் ஏற்றுமதிக்கு அளிக்கப்பட்டு வந்த, 2 சதவீத வரிச் சலுகை, 2014ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. என, ஆனந்த் சர்மா மேலும் கூறினார்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|