பதிவு செய்த நாள்
07 மே2013
03:50
புதுடில்லி:நடப்பு 2013ம் ஆண்டில், இது வரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள் (எப்.ஐ.ஐ.,), இந்திய பங்குச் சந்தைகளில், 63,643 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன.நடப்பு மே மாதத்தில், முதல் இரண்டு வர்த்தக தினங்களில் மட்டும், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில், ஒட்டு மொத்த அளவில், 8,745 கோடி ரூபாய் மதிப்பிற்கு, நிறுவனப் பங்குகளை வாங்கியுள்ளன. அதேசமயம், 5,869 கோடி ரூபாய் மதிப்பிற்கான பங்குகளை விற்பனை செய்துள்ளன.
இதையடுத்து, இந்நிறுவனங்களின், நிகர பங்கு முதலீடு, 2,606 கோடி ரூபாயாக உள்ளது என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான "செபி'யின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சாதகமற்ற அரசியல் சூழ்நிலை, நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பு போன்ற காரணங்களால், அன்னிய நிதி நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொள்ளும் முதலீடு குறைந்துள்ளது.குறிப்பாக, சென்ற ஏப்ரல் மாதத்தில், இந்நிறுவனங்களின் பங்கு முதலீடு, கடந்த, 16 மாதங்களில் இல்லாத அளவிற்கு, 5,414 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
சென்ற ஏப்ரல் மாதத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்தியாவில் கடன்பத்திரங்களில், 2,929 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன. ஒட்டு மொத்த அளவில், நடப்பாண்டில் இதுவரையிலுமாக, இந்நிறுவனங்கள், கடன்பத்திரங்களில், மேற்கொண்ட முதலீடு, 21,007 கோடி ரூபாயாக உள்ளது.நடப்பு மே மாதம் 3ம் தேதி நிலவரப்படி, இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும் வகையில், பதிவு செய்து கொண்ட நிறுவனங்களின் எண்ணிக்கை, 1,769 ஆக உள்ளது. துணை கணக்குகளின் எண்ணிக்கை, 6,383 ஆக உள்ளது என, "செபி' அமைப்பின் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|