பதிவு செய்த நாள்
17 மே2013
01:51
மும்பை:சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி கண்டுள்ளதால், உள்நாட்டில், பொதுத் துறையை சேர்ந்த மூன்று எண்ணெய் நிறுவனங்களின் இழப்பு, பெருமளவு குறைந்து உள்ளது.
கடந்த சில மாதங்களாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்து வருகிறது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 90-95 டாலர் வரை, ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது.இதையடுத்து, உள்நாட்டில், பெட்ரோலிய பொருள்களை விற்பனை செய்யும் ஐ.ஓ.சி., பீ.பி.சி.எல்., மற்றும் எச்.பி.சி.எல்., ஆகிய மூன்று நிறுவனங்களின் அன்றாட இழப்பு, நடப்பு மே மாதம், 13ம் தேதி நிலவரப்படி, 256 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இது, சென்ற பிப்ரவரியில், 454 கோடி ரூபாயாக உயர்ந்து இருந்தது.பெட்ரோல் மீதான கட்டுப்பாடு நீக்கப்பட்டதால், மேற்கண்ட மூன்று நிறுவனங்களும், மாதம் இரு முறை பெட்ரோல் விலையை நிர்ணயித்து வருகின்றன.கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், கடந்த இரண்டு மாதங்களில், பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 6 ரூபாய் வரை குறைந்து உள்ளது.
அதே சமயம், டீசல் மீதான கட்டுப்பாடு, படிப்படியாக தளர்த்தப்படுவதால், எண்ணெய் நிறுவனங்கள், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன. இதன்படி, சென்ற வெள்ளியன்று, டீசல் விலை, லிட்டருக்கு, 1 ரூபாய் உயர்த்தப்பட்டது.இதன் மூலம், ஒரு லிட்டர் டீசல் விற்பனையில், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு குறைந்துள்ளது. இந்நிலையில்,சர்வதேச கச்சா எண்ணெயய் விலை தொடர்ந்து சரிவடைந்து வருவதால்,நேற்றைய நிலவரப்படி எண்ணெயய்நிறுவனங்களுக்கு டீசல் விற்பனை ஏற்படும் இழப்பு, லிட்டருக்கு 3.80லிருந்து 3.73 ரூபாயாக குறைந்துள்ளது. அதுபோன்று டீசல், மண்ணெண்னை, சமையல் எரிவாயு விற்பனையில் ஏற்படும் அன்றாட இழப்பு, 256 கோடியிலிருந்து 252 @காடி ரூபாயாக குறைந்துள்ளது.
சென்ற 2012-13ம் நிதியாண்டில், அடக்க விலைக்கும் குறைவாக பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்த வகையில், எண்ணெய் நிறுவனங்களுக்கு, 1,61,029 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதில், டீசல் வகையிலான இழப்பு மட்டும், 57 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓ.என்.ஜி.சி., நிறுவனம்: கடந்த ஜனவரி முதல், தற்போது வரை, டீசல் விலை, லிட்டருக்கு 2.25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால், எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தின் மானியச் சுமை, 19,200 கோடி ரூபாய் வரை குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஓ.என்.ஜி.சி., ஆயில் இந்தியா, கெயில் ஆகிய நிறுவனங்கள், மானிய விலையில், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை, ஐ.ஓ.சி., பீ.பி.சி.எல்., எச்.பி.சி.எல்., ஆகிய மூன்று பொதுத் துறை நிறுவனங்களுக்கு வழங்கி வருகின்றன.
இந்த வகையில், சென்ற 2012-13ம் நிதியாண்டில், ஓ.என்.ஜி.சி., நிறுவனத்திற்கு, 44,500 கோடி ரூபாய் மானியச் சுமை ஏற்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில், டீசல் விலை உயர்வு காரணமாக, இந்நிறுவனத்தின் மானியச் சுமையில், 19,200 கோடி ரூபாய் குறையும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|